ரசிகர்களின் ரசனை மாறிவிட்டது : சரத்குமார்

தமிழ் திரையுலகின் அதிரடி கதாநாயகர்களில் ஒருவரான சரத்குமார், இப்போது கதாநாயகனாகவும், தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களிலும் நடித்து வருகிறார். தற்போது நடித்து வரும் படங்களை பற்றி அவர் கூறியதாவது:-

‘‘ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவே தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறேன். ரசிகர்களின் ரசிப்புத்தன்மை இப்போது மாறிவிட்டது. கதாநாயகனை நேசிப்பது போல் அனைத்து கதாபாத்திரங்களையும் ரசிக்க தொடங்கி விட்டார்கள். ‘பரம்பரா’ வெப் தொடரில் என் கதாபாத்திரத்துக்கு கிடைத்த வரவேற்பே இதற்கு உதாரணம்.

ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிப்பதன் அவசியம், புதிய பரிமாணத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். ஓ.டி.டி தளங்கள் மூலம் இப்போது படவாய்ப்புகள் அதிகமாகி விட்டன. நாம் வெளிநாட்டு படங்களை பார்ப்பது போலவே நமது இந்திய மொழி படங்களை வெளிநாட்டினர் பார்க்க வாய்ப்புள்ளது.

இதன் மூலம் நம்மிடம் இருந்து அவர்களும், அவர்களிடம் இருந்து நாமும் நிறைய விஷயங்கள் கற்றுக்கொள்ள முடியும்.

இப்போது நான், அரவிந்தராஜ் இயக்கத்தில், ‘பரம்பொருள்’ என்ற படத்தில் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறேன். ஒரு காவல் துறை அதிகாரிக்கும், திருடனுக்கும் இடையே நடக்கும் போட்டியே இந்த படத்தின் மூலக்கதை. ‘ருத்ரன்’ படத்தில் ராகவா லாரன்சுக்கு வில்லனாக நடிக்கிறேன். நான் ஏன் வில்லன் ஆனேன்? என்பதை சுற்றிதான் கதை அமைந்துள்ளது. ‘பைவ் ஸ்டார்’ கதிரேசன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்கிறேன்.

விஜய்யின் 66-வது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறேன். விக்னேஷ் ராஜ் இயக்கத்தில் ‘போர் தொழில்’ படத்தில் துப்பறியும் காவல் துறை அதிகாரியாக நடிக்கிறேன்.

Related posts