தந்தை மற்றும் மகனுடன் நடித்தது

ஓ மை டாக்’ படத்தில் முதன்முறையாக தந்தை மற்றும் மகனுடன் இணைந்து பணியாற்றியதை ஆசீர்வாதமாக நினைத்து பெருமைப்படுகிறேன் என நடிகர் அருண்விஜய் தெரிவித்திருக்கிறார்.

நடிகர் அருண் விஜய், அவருடைய தந்தை நடிகர் விஜயகுமார், மகன் அர்னவ் விஜய் ஆகிய மூன்று பேரும் ‘ஓ மை டாக்’ என்ற படத்தில் இணைந்து நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை சூர்யா, ஜோதிகா ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர். இது, செல்லப்பிராணிகளையும், அவைகளின் பாசத்தையும் சித்தரிக்கும் கதை.

இதுபற்றி அருண் விஜய் கூறியதாவது:-

“ஒரு நாய் குட்டிக்கும், குழந்தைக்கும் இடையேயான புரிதலை அடிப்படையாக கொண்ட படம், இது. அறிமுக இயக்குனர் சரோவ் சண்முகம் எழுதி இயக்கியிருக்கிறார். இந்த படம் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தலைமுறை நடிகர்களை ஒன்றிணைத்து இருக்கிறது.

நான், அப்பா விஜயகுமார், என் மகன் அர்னவ் விஜய் ஆகிய மூன்று பேரும் இணைந்து நடித்துள்ளோம். தாத்தா, தந்தை, பேரன் ஆகிய நிஜமான உறவுகளை திரையிலும் காட்டியிருக்கிறோம்.

இது, எனக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதம். தமிழ் திரையுலகில் இப்படி நடப்பது, இதுவே முதல் முறை. எங்களால் மறக்க முடியாத அனுபவம். ஊட்டியில் நடந்த படப்பிடிப்பின்போது என் தந்தை மற்றும் மகனுடன் செலவழித்த தருணங்கள், அழகானவை.”

இவ்வாறு அருண் விஜய் கூறினார்.

Related posts