இலவசங்களை ஊக்குவித்தால் இலங்கை நிலைமை

இலவசங்களைக் கொடுக்கும் சில மாநிலங்கள் இலங்கையைப் போன்ற பொருளாதார நெருக்கடி நிலையை சந்திக்க நேரிடலாம்” என பிரதமர் நரேந்திர மோடிக்கு செயலர் பதவியில் உள்ள சில அதிகாரிகள் எடுத்துரைத்துள்ளனர்.
நல்லாட்சியை வழங்க, நிர்வாகத்தில் மேம்பாட்டைக் கொண்டுவர ஆலோசனைகளை வழங்குமாறு பிரதமர் மோடி, பிராந்திய வாரியாக 6 குழுக்களை அமைத்துள்ளார். அந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகள் அனைவருமே செயலர் அந்தஸ்தில் உள்ளவர்களாவர்.
இந்நிலையில், நேற்றிரவு நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், பிரதமரின் முதன்மைச் செயலர் பிகே மிஷ்ரா, கேபினட் செயலர் ராஜீவ் கவுபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பிரதமர் மோடி, “பற்றாக்குறைகளை சமாளிக்க திட்டம் போடுவதை விடுத்து அதிகப்படியானவற்றை நிர்வகிக்க திட்டம் தீட்டுங்கள். பெரிய வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்ட வறுமையைக் காரணம் காட்டும் பழைய சாக்குகளை விட்டொழியுங்கள். பெரிய இலக்குகளைக் கொள்ளுங்கள்” என்று அதிகாரிகளுக்கு கூறியுள்ளார்.
அப்போது அதிகாரிகள் சிலர், “இலவசங்களை அள்ளிக் கொடுக்கும் மாநிலங்கள் இலங்கையைப் போன்று பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்” என்று எடுத்துரைத்தனர்.
அண்மையில், தேர்தலை சந்தித்த பஞ்சாப், உ.பி., கோவா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அறிவிக்கப்பட்ட இலவசத் திட்டங்களை முன்வைத்து அதிகாரிகள் இந்த ஆலோசனையை பிரதமருக்கு வழங்கினர்.

Related posts