காபந்து அரசாங்கத்தை நியமிக்க யோசனை

அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கத்தை நியமிக்கும் யோசனை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். அத்துடன் புதிய பிரதமருக்கான பிரேரணையையும் முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

——

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர்பீடம் இன்று (03) இரவு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமா? இல்லையா என்பது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர கடந்த ஏப்ரல் மாதம் முதலாம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடி, நாட்டின் முன்னேற்றத்துக்கான நிலையான வேலைத்திட்டத்துடன் கூடிய காபந்து அரசாங்கத்தின் கீழ் நாட்டை ஆட்சி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த வாரத்திற்குள் இத்திட்டம் அமுல்படுத்தப்படாவிட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் அனைத்து அரசாங்க பதவிகளையும் இராஜினாமா செய்துவிட்டு அடுத்த சில நாட்களுக்கு பாராளுமன்றத்தில் சுயேட்சை குழுவாக செயற்படுவார்கள் எனவும் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

—–

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய சமூக ஊடகங்களுக்கான கட்டுப்பாடுகள் இன்று (03) பிற்பகல் 3.30 மணிக்கு நீக்கப்படும் என, இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக ஆர்ப்பாட்ட பேரணிகள் ஒழுங்கு செய்யப்பட்டு வந்த நிலையில் சில பகுதிகளில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டு, நேற்று (02) மாலை 6.00 மணி முதல் நாளை (04) காலை 6.00 மணி வரையான 36 மணித்தியாலங்களுக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

Related posts