இலங்கையில் பெரும் விலைகள் உயர்வு

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 30 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தீர்மானித்துள்ளார்.

இதேவேளை, ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளும் சுமார் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

——

நாட்டில் மருந்துப் பொருட்களின் விலைகளை 29 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் விலைக் கட்டுப்பாட்டுக் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.

—–

செரண்டிப் நிறுவனம் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

—–

இலங்கையில் வழங்கப்படும் அனைத்து விமான டிக்கெட்களின் விலைகளையும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நாணய மாற்று வீதம் அதிகரித்துள்ளமையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கையில் வழங்கப்படும் அனைத்து விமானப் பயணச்சீட்டுகளுக்கான கட்டணம் 27% ஆக அதிகரிப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

—–

நாட்டில் பொருட்களின் விலைகள் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் சூழ்நிலையில், இன்று முதல் கோதுமை மாவின் விலையும் எகிறியுள்ளதால் மலையக மக்கள் பெரிதும் பாதிக்கப்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மலையகத்தில் நகர் புறங்கள் மற்றும் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் மக்களுள் பெரும்பாலானவர்கள், தமது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு கோதுமை மாவை பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான வீடுகளில் இருவேளை ரொட்டியே உண்ணப்படும்.

இதனால் மாதாந்தம் அதிகளவு கோதுமை மாவை அம்மக்கள் கொள்வனவு செய்வார்கள். இந்நிலையில், கோதுமை மாவின் விலை 35 முதல் 40 ரூபா வரை அதிகரித்துள்ளதால் அது அவர்களின் வாழ்க்கைச் சுமையை மேலும் அதிகரிக்க வைக்கும்.

ஏற்கனவே பெருந்தோட்ட மக்களுக்கு உரிய வகையில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. தோட்டப்பகுதிகளில் நாட் சம்பளத்துக்கு வேலை செய்பவர்களின் சம்பளமும் அதிகரிக்கப்படவில்லை. இதனால் கோதுமை மா விலை அதிகரிப்பு அவர்களுக்கு பெரும் தாக்கமாக அமையும் என பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசால் மாதாந்தம் 15 கிலோ கோதுமை மா பெருந்தோட்டத்தில் வேலை செய்யும் பதிவுசெய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்படுகின்றது. அதுகூட அவர்களுக்கு போதுமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts