தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துள்ளது

தமிழ் பேசும் மக்கள் ஒன்றுபட வேண்டிய காலம் வந்துள்ளது. அந்தவகையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக தற்போது ஓரணியில் திரண்டுள்ளோம். மக்களும் ஒன்றுபட்டுள்ளனர். எனவே, சிறந்த எதிர்காலத்துக்கான ஆரம்பப்புள்ளியாகக்கூட இது அமையலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நுவரெலியா நகரில் இன்று (06) கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, எமது விடுதலைப்போராட்டத்துக்கு மலையக மக்களும் பெரும் பங்களிப்பு செய்துள்ளனர். இதனால் பயங்கரவாத தடைச்சட்டத்தால் அவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தற்போது பயங்கரவாதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, தமது அரசியல் எதிராளிகளை ஒடுக்குவதற்காகவே இச்சட்டத்தை ஆளுந்தரப்பு பயன்படுத்திவருகின்றது. இதனால்தான் அனைத்து இன மக்களையும் இந்த பயணத்தில் இணைத்துள்ளோம்.

அதேவேளை, மலையக மக்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கப்படும் என அரசு கூறியது. ஆனால் அது உரிய வகையில் நடக்கவில்லை. அதற்கு எதிராக மக்கள் போராடினால், அவர்களுக்கு எதிராகவும் பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படலாம். கைது செய்யப்படலாம்.

நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மலையக மக்களே திகழ்கின்றனர். அந்திய செலாவணியை பெற்றுக்கொடுக்கின்றனர். எஸ்.பி. திஸாநாயக்கவுக்கு அமைச்சு பதவி கிடைத்துள்ளது. வாழ்த்து தெரிவித்து பதாதை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கைத்தொழில் அமைச்சரான அவர், மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related posts