ஜோகோவிச் விசாவை மீண்டும் ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசு

டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் விசாவை ஆஸ்திரேலிய அரசு மீண்டும் ரத்து செய்துள்ளது.

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதி என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போடாமல் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க மெல்போர்ன் சென்ற உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதுடன், ஆஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் அவரது விசாவை ரத்து செய்து மெல்போர்னில் தடுப்பு காவலில் வைத்திருந்தனர்.

தனக்கு எதிரான நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கும் ஜோகோவிச் ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க அனுமதி அளிக்க வேண்டும் என்று மெல்போர்னில் உள்ள பெடரல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்த ஆஸ்திரேலிய அரசின் முடிவை ரத்து செய்தது.

கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாக பின்பற்றி வரும் ஆஸ்திரேலிய அரசுக்கு அந்நாட்டு நீதிமன்றம் அளித்த பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. ஆஸ்திரேலிய நீதிமன்றம். தீர்ப்பு வெளியான அடுத்த 30 நிமிடங்களில் தடுப்புக் காவல் மையத்திலிருந்து ஜோகோவிச்சை விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

எனினும், குடியேற்ற மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே, தனிப்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி விசாவை ரத்து செய்ய முடியும் என அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவின் குடியேற்ற மந்திரி அலெக்ஸ் ஹாவ்கே, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜோகோவிச்சின் விசாவை மறுபடியும் ரத்து செய்துள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் ஜோகோவிச் பங்கேற்பது சந்தேகத்திற்குள்ளாகி உள்ளது.

இதுகுறித்து அலெக்ஸ் ஹாவ்கே கூறுகையில் ‘பொது மக்களின் நலன் கருதி என்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி 133சி(3) பிரிவின் கீழ் நோவக் ஜோகோவிச் விசாவை ரத்து செய்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

Related posts