ஆவணப்படம் தயாரிக்கிறார் பா. ரஞ்சித்..!

சோம்நாத் வாக்மேர் இயக்கும் ஆவணப்படத்தை இயக்குனர் பா. ரஞ்சித் தயாரிக்க இருக்கிறார்.

‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து நடிகர் ரஜினிகாந்தை வைத்து ‘கபாலி’, ‘காலா’ ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் இயக்குனர் பா. ரஞ்சித். சமீபத்தில் அவரது இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இயக்கம் மட்டுமில்லாது பா.ரஞ்சித் தன்னுடைய நீலம் புரொடக்சன்ஸ் மூலம் படத் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார். அவரது தயாரிப்பில் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகபோரின் கடைசி குண்டு ஆகிய படங்கள் வெளியாகி உள்ளது. சமீபத்தில் அவரது தயாரிப்பில் வெளியான ‘ரைட்டர்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் தற்போது, பா. ரஞ்சித் தன்னுடைய நீலம் புரொடக்சன்ஸ் மூலம் ‘சைத்யபூமி’ என்ற ஆவணப்படத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த ஆவணப்படத்தை பிரபல ஆவணப்பட இயக்குனர் சோம்நாத் வாக்மேர் இயக்க இருக்கிறார். சட்ட மாமேதை டாக்டர். அம்பேத்கரின் நினைவிடம் சைத்யபூமி என்று அழைக்கப்படுகிறது. இந்த நினைவிடம் மராட்டிய மாநிலம் மும்பை தாதர் பகுதியில் உள்ளது.

இதுகுறித்த அறிவிப்பை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள பா. ரஞ்சித், ‘ஆவணப்பட இயக்குனர் சோம்நாத் வாக்மேர் அடுத்ததாக இயக்க இருக்கும் ‘சைத்யபூமி’ ஆவணப்படத்தை நீலம் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. இந்த ஆவணப்படம் மும்பை தாதர் பகுதியில் அமைந்துள்ள டாக்டர். பாபாசாகிப் அம்பேத்கரின் நினைவிடத்தைப் பற்றியது’ என்று கூறியுள்ளார்.

Related posts