ஹாலிவுட்டிலிருந்து வாய்ப்பு வந்ததா? – ராஜமௌலி

ஹாலிவுட் வாய்ப்பு குறித்து இயக்குநர் ராஜமௌலி மனம் திறந்துள்ளார்.
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் வரும் ஜனவரி 7 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதற்கான விளம்பரப் பணிகள் முழு மூச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நேற்று ராஜமௌலி, ஆலியா பட் உள்ளிட்ட படக்குழுவினர் மும்பையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது படம் குறித்த பல்வேறு தகவல்களை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.
ஹாலிவுட்டிலிருந்து வாய்ப்பு வந்ததா என்ற பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ராஜமௌலி பதில் அளித்தார். “வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு ஹாலிவுட்டிலிருந்து எந்த வாய்ப்பும் வரவில்லை. நான் இந்தியப் படங்களையே இயக்க விரும்புகிறேன். மற்ற துறைகளில் இருந்து எனக்கு வாய்ப்பு வந்தாலும் கூட நான் ஒரு இந்தியக் கதையையே எடுத்து அவர்களுக்கு வழங்குவேன்” என்று ராஜமௌலி தெரிவித்தார்.

Related posts