விரைவில் வீடு கட்டித் தருவதாக உறுதி

ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளை நேரில் சந்தித்து ராகவா லாரன்ஸ்
த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இப்படம் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படத்தில் காட்டப்பட்ட ராசாக்கண்ணு மீது பொய் வழக்குப் போடப்பட்டு போலீஸ் சித்ரவதையில் உயிரிழந்தார். இந்த வழக்கில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தற்போது தான் மிகவும் வறுமையில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். பார்வதி அம்மாளின் அந்த பேட்டியைப் பார்த்த நடிகர் ராகவா லாரன்ஸ் ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு தனது சொந்த செலவில் வீடு கட்டித் தருவதாக அறிவித்திருந்தார்.இந்நிலையில் நேற்று (நவ.16) ராசாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளின் வீட்டுக்கு நேரில் சென்ற ராகவா லாரன்ஸ் அவரிடம் நிதியுதவியை வழங்கினார். அவரிடம் விரைவில் சொந்தமாக வீடு கட்டித் தருவதாகவும் உறுதி அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “முதலில் இந்த படத்தை எடுத்த சூர்யா, ஜோதிகாவுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இப்படத்தை எடுக்க வில்லையென்றால் பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டிக் கொடுக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்காது” என்று கூறினார்.

Related posts