கவர்ச்சி நடிகை மருத்துவமனையில் அனுமதி ; கணவர் கைது

காதல் கணவர் தாக்கியதை அடுத்து நடிகை பூனம் பாண்டே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புகாரை அடுத்து அவர் கணவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

பிரபல இந்தி நடிகை பூனம் பாண்டே சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். கடந்த 2011 ஆம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக மைதானத்தில் ஓடுவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இதன் மூலம் கவனிக்கப்பட்ட இவர், தனது சமூக வலைதளப் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை இப்போது கிறங்கடித்து வருகிறார்.

இவர், தனது நீண்ட நாள் காதலர் சாம் பாம்பே என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்துகொண்டார். இருவரும் தேனிலவுக்காக கோவா சென்ற இடத்தில் தகராறில் ஈடுபட்டனர். கணவர் தன்னை அடித்து சித்ரவதை செய்ததாக போலீசிலும் புகார் அளித்தார். பின்னர் இருவரும் சமரசமாகி இணைந்தனர்.

இந்த நிலையில் இருவருக்கும் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. சாம் பாம்பே, பூனம் பாண்டேவை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் அவர் தலை, முகம் மற்றும் கண்களில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கொடுத்த புகாரை அடுத்து, மும்பை போலீசார் சாம் பாம்பே-வை கைது செய்துள்ளனர்.

Related posts