கல்வி நலனுக்கு நடிகர் சூர்யா ரூ. 1 கோடி நிதியுதவி

டைரக்டர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ‘ஜெய்பீம்’. மேலும், இந்த படத்தில் மணிகண்டன், லிஜோ மோல் ஜோஸ், ரெஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் நவம்பர் 2 (நாளை) அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் பிரத்யேகக் காட்சிகள் திரையிடப்பட்டு வருகின்றன.

பழங்குடி இருளர் இன மக்களின் வாழ்க்கை நெருக்கடிகளைப் பற்றி இந்தப் படம் பேசியிருக்கிறது. இந்தப் படத்தை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரத்யேகமாக திரையிட்டுக் காட்டியது படக்குழு. அவர் படக்குழுவினருக்குத் தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த நிலையில், முதல்-அமைச்சர் முன்னிலையில் இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்காக, 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யா 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கினார். சூர்யாவின் இந்த உதவியை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Related posts