மீனவர் உயிரிழப்பிற்கு ஒரு கோடியா?

உங்கள் அரசியலை குப்பையில் போடுங்கள். சட்டத்தை நடைமுறைப்படுத்தி விட்டு இங்கு வந்து பேசுங்கள். அத்துமீறி மீன் பிடிப்பது தொடர்பாக இரண்டு சட்டங்கள் காணப்படுகின்றன. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டுமென கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய மீனவர்களின் படகை இலங்கை கடற்படையின் படகு மோதியதில் உயிரிழந்தவருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம். அது ஒரு புறமிருக்க எமது கடற்பரப்பிற்குள் மீண்டும் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல் ஆரம்பித்துள்ளது. எங்கள் கடற்பரப்புக்குள் வரவேண்டாம் என்று சொல்லியும் கேட்கின்றார்களில்லை. பருத்தித்துறையின் முனை கடற்பரப்புக்குள் மீண்டும் இந்திய இழுவைப் படகுகள் வந்து சேதங்களை விளைவித்துள்ளன.

கடற்படை இழுவைப் படகுகளை தடுத்து அத்துமீறுபவர்களை கைது செய்ய வேண்டும். அத்துமீறும் படகுகளை அரசுடமையாக்கி அதன் மூலம் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான நிவாரணங்களை வழங்க வேண்டும். காலங்காலமாக இந்திய இழுவைப்படகுகளால் நாம் கோடிக்கணக்கான உபகரணங்களையும் பொருட்களையும் இழந்துள்ளோம்.

எங்கள் கடற்பரப்புக்குள் அத்துமீறி வருபவர்களை ஏன் இந்திய அரசாங்கம் பார்த்துக்கொண்டு இருக்கிறது என்று எமக்கு புரியவில்லை. உங்கள் கடல் வளங்கள் முழுவதையும் அழித்து விட்டீர்கள். மனசாட்சி இல்லாமல் எங்களுடைய வளங்களையும் அழிக்க முற்படுகின்றார்கள். எங்கள் வளம் முற்றாக அளிக்கப்பட்டால் நாம் கேவலமான நிலைக்கு தள்ளப்படுவோம்.

எங்கள் உயிர் போனாலும் சரி தமிழ்நாட்டு மீனவர்கள் உயிர் போனாலும் சரி எல்லாமே ஒன்று தான். இந்திய மீனவரின் உயிரிழப்புக்கு ஒரு கோடி ரூபா இழப்பீடு கோரப்படுகிறது. இந்திய இழுவைப்படகுகளால் நாங்கள் பல கோடிகளை இழந்திருக்கிறோம். உங்கள் இழப்பீட்டை கழித்துக் கொண்டு மீதியை எமக்குத் தாருங்கள்.

தமிழக மக்கள் தொப்புள் கொடி உறவு தான். ஆனால் நாங்கள் உணவுக்காக கஷ்டப்படும் போது தொப்புள் கொடியைப் பார்க்க முடியாது. பெரு முதலாளிகளதும் அமைச்சர்களுடைய படகுகளுமே இங்கு அத்துமீறி வருகின்றது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

உங்கள் அரசியலை குப்பையில் போடுங்கள். சட்டத்தை நடைமுறைப்படுத்தி விட்டு இங்கு வந்து பேசுங்கள். அத்துமீறி மீன் பிடிப்பது தொடர்பாக இரண்டு சட்டங்கள் காணப்படுகின்றன. அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அதைவிடுத்து உங்களுக்கு சரி என்றால் சட்டத்தை கொண்டு வருவதும் உங்களுக்குப் பிழை என்றால் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமல் விடுவதும் பின்னர் நடைமுறைப்படுத்த கோருவதும் கேலிக்கூத்தான விடயமாகும். சட்டத்தரணி ஒருவர் இவ்வாறான ஒரு கேவலமான வேலையை செய்வது வேதனையாக இருக்கின்றது.

நாடு சோமாலியாவை விட மிக மோசமான நிலைக்கு செல்லப் போகின்றது. இவற்றைப் பற்றியும் மக்கள் பிரச்சினை பற்றியும் பேச அரசியல்வாதிகளிடம் வலியுறுத்துகிறோம். மக்களுக்கு தேவையானவற்றை அரசாங்கத்துடன் பேசி செய்யுங்கள் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் எங்கள் விடயத்தை அரசியலுக்குள் புகுத்த வேண்டாம். ஜனாதிபதி பிரதமர் கடற்றொழில் அமைச்சரிடம் நாங்கள் கோருவது என்னவென்றால் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைபவர்களையும் சட்டவிரோதமான தொழிலையும் அனுமதிக்க வேண்டாம். அவற்றுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதன்போது கருத்து தெரிவித்த கொட்டடி கடற்றொழிலார் கூட்டுறவு சங்க உபதலைவர் வீ.அரிகிருஷ்ணன் இந்தியாவின் எந்தெந்த பகுதியில் இருந்து இங்கு படகுகள் வருகின்றன என்பது எமக்கு தெரியும். அத்துமீறுபவர்களை தடுக்க முற்பட்டோம். ஆனால் முடியாமல் போய்விட்டது. இனிமேலும் இந்த இழுவைப் படகுகளை எங்கள் எல்லைக்குள் விட வேண்டாமென தமிழக முதலமைச்சரிடம் கேட்டுக் கொள்கின்றோம். அவர் நினைத்தால் கட்டுப்படுத்த முடியும் என்றார்.

Related posts