ஆச்சரியப்படுத்தும் தோனியின் அன்பு: சூர்யா

தோனியின் அன்பு ஆச்சரியப்படுத்துவதாக சூர்யா தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார்.
தா.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜெய் பீம்’. 2டி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் நவம்பர் 2-ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
‘ஜெய் பீம்’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் இன்று (அக்டோபர் 15) விஜயதசமியை முன்னிட்டு டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
மேலும், இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் ‘ஜெய் பீம்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டார் சூர்யா. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் ஆச்சரியப்படுத்தும் அன்பு குறித்துப் பேசியுள்ளார்.
இது தொடர்பாக சூர்யா கூறியதாவது:
“ரசிகர்களின் அன்பை எப்படித் திருப்பிக் கொடுப்பது என்று நான் தவித்திருக்கிறேன். தோனி எப்போதுமே அதைத் தவறவிட்டதில்லை. ஒரு சிறுமி அவ்வளவு உணர்ச்சிகரமாகத் தோற்கும் நிலையில் அழுது கொண்டிருந்த புகைப்படங்களைப் பார்த்தேன். ஆட்டத்தில் வெற்றி பெற்றதும் பந்தில் கையெழுத்திட்டு அந்தச் சிறுமிக்குக் கொடுத்திருக்கிறார். அந்தச் சிறுமியை தோனி சிரிக்க வைத்தார். அந்தத் தருணம் அச்சிறுமியின் வாழ்க்கையில் என்றும் நினைவில் நிற்குமாறு செய்தார்.
ஜோ ஒரு முறை குழந்தைகளுடன் தோனியைப் பார்க்க வேண்டும் என்று கேட்டபோது, அவர் எங்களுக்கான நேரத்தைக் கொடுத்தார். எப்போதெல்லாம் அவரால் முடியுமோ அவர் நேரம் கொடுக்கத் தயங்கியதே இல்லை.
’24’ படத்தில் அவருடன் செல்ஃபி எடுப்பது போன்ற காட்சிக்கு தோனி அனுமதி கொடுத்தார். பிபிசியிலிருந்து அவர் ஆடும் பதிவுகள் வேண்டும் என்று கேட்டபோது அதற்குச் சம்மதித்து வாங்கிக் கொடுத்தார். அனுமதி தந்தார். இப்படி தோனியிடமிருந்து நிறைய அன்பு எனக்குக் கிடைத்திருக்கிறது”.
இவ்வாறு சூர்யா தெரிவித்துள்ளார்.

Related posts