ஒடும் ரெயிலில் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து மராட்டியத்தின் மும்பை நோக்கி நேற்று இரவு லக்னோ-மும்பை புஷ்பக் எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டது. மராட்டியத்தின் லகட்புரி நகரில் உள்ள நிலையத்திற்கு ரெயில் வந்தபோது அதில் பயங்கர ஆயுதங்களுடன் சில கொள்ளையர்கள் ஏறினர். படுக்கை பெட்டியில் (சிலிப்பர் கோட்ச்) ஏறிய கொள்ளையர்கள் பயணிகளிடம் ஆயுதங்களை காட்டி மிரட்டி நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர்.

மேலும், பெண் பயணி ஒருவரையும் ஓடும் ரெயிலில் கொள்ளையர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். பாலியல் வன்கொடுமையை தடுக்க முயன்ற பயணிகள் 6 பேரை கொள்ளையர்கள் பயங்கரமான ஆயுதங்களை கொண்டு தாக்கினர். இதில், 6 பயணிகள் படுகாயமடைந்தனர்.

மும்பையின் கசாரா பகுதியில் உள்ள நிலையத்திற்கு ரெயில் வந்ததும் பயணிகள் கூச்சலிடத்தொடங்கினர். உடனடியாக அங்கு விரைந்த ரெயில்வே போலீசார் கொள்ளையர்கள் 2 பேரை கைது செய்தனர். ஆனால், 6 பேர் தப்பிச்சென்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ரெயில்வே போலீசார் தப்பியோடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடினர். போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் மேலும் 2 கொள்ளையர்கள் பிடிபட்டனர். தப்பியோடிய எஞ்சிய 4 கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிகளிடம் கொள்ளை, பெண் பயணி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மராட்டியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts