‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’

2021-ம் ஆண்டுக்கான ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, பபாசி இன்று (செப். 30) வெளியிட்ட செய்திக்குறிப்பு: “2007-ல் 30-வது சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்த, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தம் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை பபாசியிடம் வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும், ஒரு ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் தலா ஒரு லட்சம் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்கக் கூறினார்.
அதற்காக, பபாசியால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் இருந்து, கவிதை, புனைவு இலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் எழுதும் சிறந்த 2 பேருக்கு ஆண்டுதோறும் விருது மற்றும் ரூ.1 லட்சம் பணமும் அளித்து கவுரவித்து வருகிறது. அதன்படி, 2007-ல் இருந்து இதுவரை 84 எழுத்தாளர்களுக்கு ரூ.84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
2021-ம் ஆண்டுக்கான விருதாளர்களை அதற்காக அமைக்கப்பெற்ற குழு தேர்வு செய்துள்ளது. தேர்வுபெற்ற விருதாளர்கள் பட்டியலை பபாசியின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் அறிவித்துள்ளார். கரோனா காரணமாக நடைபெறாமல் நின்றுவிட்ட 2020-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவும், 2021-ம் ஆண்டுக்கான விழாவுடன் இணைந்து நடைபெறும். விழா குறித்த தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று பபாசி தலைவர் அறிவித்துள்ளார்.
2021-ம் ஆண்டு விருது பெறும் விருதாளர்கள்:
1. அபி – கவிதை
2. இராசேந்திர சோழன் – புனைவிலக்கியம்
3. எஸ்.ராமகிருஷ்ணன் – உரைநடை
4. வெளி ரங்கராஜன் – நாடகம்
5. மருதநாயகம் – ஆங்கிலம்
6. நதித் சாகியா – பிற இந்திய மொழி (காஷ்மீரி)”.
இவ்வாறு பபாசி தெரிவித்துள்ளது.

Related posts