லைகா நிறுவனத்துடன் இயக்குநர் ஷங்கர் பேச்சுவார்த்தை

‘இந்தியன் 2’ படப் பிரச்சினை தொடர்பாக லைகா நிறுவனமும், இயக்குநர் ஷங்கரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படம் தயாராகி வருகிறது. இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்தை முடித்துக் கொடுக்காமல், வேறு படங்களை இயக்க ஷங்கருக்குத் தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்தநிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, லைகா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று (செப். 02) விசாரணைக்கு வந்தது.
அப்போது, லைகா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், லைகா நிறுவனம் மற்றும் இயக்குநர் ஷங்கர் தரப்பில் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், இதற்குத் தீர்வு காணும் முயற்சியும் தீவிரமாக நடைபெற்று வருவதால், பேச்சுவார்த்தை முடித்து முடிவு காண்பதற்கு, 4 வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் லைகா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மைதான் என்று இயக்குநர் ஷங்கர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை 4 வாரத்துக்குத் தள்ளி வைத்தனர்.

Related posts