வைரலான வடிவேலு படத்தின் போஸ்டர்:

வைரலான வடிவேலு படத்தின் போஸ்டர் தொடர்பாக சி.வி.குமார் விளக்கம் அளித்துள்ளார்.
‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தினால் ஏற்பட்ட பிரச்சினை இன்னும் முழுமையாக முடியவில்லை. இதனால், வடிவேலு புதிதாக எந்தவொரு படத்திலும் ஒப்பந்தமாகாமல் இருக்கிறார். விரைவில் ஓடிடியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளராக உள்ளார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், அதிகாரபூர்வமாக இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வரவில்லை.
இதனிடையே, சமூக வலைதளத்தில் அவ்வப்போது வடிவேலுவின் புதிய படம் என்று போஸ்டர்கள் பரவும். அதனை வடிவேலுவின் தீவிர ரசிகர்கள் உருவாக்கி இருப்பார்கள். இதை பலரும் உண்மையான போஸ்டர் என்று பகிர்வார்கள்.
அதே போன்று, நேற்று (ஆகஸ்ட் 11) வடிவேலு நடிப்பில் ‘டிடெக்டிவ் நேசமணி’ என்ற போஸ்டர் வைரலாக பரவியது. இதனை ராம்பாலா இயக்கவுள்ளதாகவும், சிவிகுமார் தயாரிக்கவுள்ளதாகவும் அந்தப் போஸ்டரில் குறிப்பிட்டு இருந்தார்கள்.
இந்தப் போஸ்டர் தொடர்பாக பலரும் சி.வி.குமாரிடமும் கேள்வி எழுப்பினார்கள். ‘டிடெக்டிவ் நேசமணி’ போஸ்டர் தொடர்பாக சி.வி.குமார் தனது ட்விட்டர் பதிவில் “போலி செய்தியா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமாப்பா. ஆனா தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், ‘டிடெக்டிவ் நேசமணி’ போஸ்டர் ரசிகர்களால் உருவாக்கப்பட்டுப் பகிரப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது.

Related posts