மீண்டும் சர்ச்சையில் கரீனா கபூர்

இந்தி நடிகர் சயீப் அலிகானை திருமணம் செய்து கொண்ட நடிகை கரீனா கபூர் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஏற்கனவே தனது மகனுக்கு தைமூர் என்ற பெயர் வைத்து எதிர்ப்புக்கு உள்ளானார்.

இந்தியா மீது 14-ம் நூற்றாண்டில் படையெடுத்து ஏராளமானோரை கொன்று குவித்த மங்கோலிய மன்னனான தைமூர் பெயரை எப்படி சூட்டலாம் என்று பலரும் கண்டித்தனர். பின்னர் தனது பிரசவ கால அனுபவங்களை புத்தகமாக எழுதி அதற்கு பிரெக்னன்ஸி பைபிள் என்று பெயரிட்டு வெளியிட்டார். இது கிறிஸ்தவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. புத்தகத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்று வற்புறுத்தினர்.

ராமாயணம் படத்தில் கரீனா கபூர் சீதையாக நடிக்கவும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் கரீனா கபூருக்கு பிறந்த 2-வது ஆண் குழந்தைக்கு ஜெகாங்கீர் என்று பெயர் வைத்து இருப்பதாக தகவல் பரவி மீண்டும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

1606-ம் ஆண்டு சீக்கிய குருவான அர்ஜுன் தேவை சிறையில் அடைத்து கொடுமைப்படுத்திய முகலாய மன்னன் ஜெகாங்கீர் பெயரை குழந்தைக்கு சூட்டுவதா? என்று வலைத்தளத்தில் கண்டனங்கள் கிளம்பி உள்ளன.

Related posts