மீண்டும் மகேஷ் பாபுவுக்கு நாயகியான பூஜா ஹெக்டே

த்ரிவிக்ரம் – மகேஷ் பாபு இணைந்துள்ள படத்தின் நாயகியாக பூஜா ஹெக்டே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
பரசுராம் இயக்கத்தில் மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘சர்காரு வாரி பாட்டா’. 2022-ம் ஆண்டு ஜனவரி 12-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் டீஸர் நேற்று (ஆகஸ்ட் 9) வெளியிடப்பட்டது. இதற்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
நேற்று மகேஷ் பாபுவின் பிறந்த நாளாகும். இதனை முன்னிட்டு தெலுங்கு திரையுலகின் முன்னணி பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய அடுத்த படத்துக்கான படக்குழுவினர் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.
மகேஷ் பாபு நடிக்கும் 28-வது படத்தினை த்ரிவிக்ரம் இயக்கவுள்ளார். இதில் நாயகியாக பூஹா ஹெக்டே நடிக்கவுள்ளார். மகேஷ் பாபு – பூஜா ஹெக்டே கூட்டணி இதற்கு முன்பாக ‘மகரிஷி’ படத்தில் இணைந்து நடித்துள்ளது.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக மதி, இசையமைப்பாளராக தமன், எடிட்டராக நவீன் உள்ளிட்டோர் பணிபுரியவுள்ளனர். ‘சர்காரு வாரி பாட்டா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், த்ரிவிக்ரம் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார் மகேஷ் பாபு.
த்ரிவிக்ரம் படத்தை முடித்துவிட்டு, ராஜமெளலி இயக்கவுள்ள படத்துக்குத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் மகேஷ் பாபு. இது அவருடைய நடிப்பில் உருவாகும் 29-வது படமாகும்.

Related posts