மனைவியின் உடலுடன் பல மணிநேரம் அலைந்து, தவித்த முதியவர்

எதற்காக உயிரிழந்து உள்ளார் என தெரியாமலேயே எதிர்ப்பு தெரிவித்த கிராமவாசிகளால் மனைவியின் உடலுடன் முதியவர் ஒருவர் பல மணிநேரம் அலைந்து திரிந்துள்ளார்.

உத்தர பிரதேசத்தின் ஜான்பூரில் வசித்து வருபவர் திலக்தாரி சிங். இவரது மனைவி ராஜ்குமாரி (வயது 50). இவருக்கு நீண்டகால உடல்நல பாதிப்பு இருந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.

இதனால் அவரை தூக்கி கொண்டு உமாநாத் சிங் மாவட்ட மருத்துவமனைக்கு சிங் சென்றுள்ளார். எனினும், சிங்கின் மனைவி பின்னர் உயிரிழந்து விட்டார். ஆம்புலன்ஸ் ஒன்றில் வைத்து சிங்கின் மனைவியின் உடலை மருத்துவமனை நிர்வாகம் திருப்பி அனுப்பி விட்டது.

ஆனால், மனைவியின் உடலை தகனம் செய்ய சென்ற சிங்கிற்கு கிராமவாசிகளிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கொரோனா தங்களுக்கு பரவி விடும் என அவர்கள் அச்சம் தெரிவித்து உள்ளனர்.

ஆனால், உண்மையில் சிங்கின் மனைவி கொரோனா பாதித்து உயிரிழந்து உள்ளாரா? அல்லது வேறு காரணங்களால் மரணமடைந்து விட்டாரா? என்று மருத்துவமனை நிர்வாகம் உறுதிப்படுத்தவில்லை.

இதனால் சிங், மனைவியின் உடலை சைக்கிள் ஒன்றில் எடுத்து கொண்டு தகனமேடைக்காக அலைந்துள்ளார். நாள் முழுவதும் அலைந்து, திரிந்தும் பலனின்றி சோர்வடைந்து விட்டார். உடலை சாலையில் போட்டு விட்டு அதனருகிலேயே தளர்வாக அமர்ந்து விட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்து, அடுத்த நாள் ஜான்பூர் நகர போலீசார் முதியவரின் உதவிக்கு வந்துள்ளனர். இதன்பின்னர் ராம்காட் பகுதியில் கடந்த செவ்வாய் கிழமை அந்த பெண்ணின் இறுதி சடங்குகளை போலீசார் நடத்தினர்.

Related posts