விஜய் படக்குழுவினர் அவசரமாக சென்னை திரும்பினார்கள்

விஜய் இப்போது அவருடைய 65-வது படத்தில் நடித்து வருகிறார். படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. ‘விஜய் 65’ என்ற பெயரிலேயே படம் வளர்ந்து வருகிறது.

இதில் விஜய் ஜோடியாக பிரபல இந்தி நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் ஒரே ஒரு நாள் மட்டும் நடந்தது. அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் ஜார்ஜியா நாட்டுக்கு சென்றார்கள்.

அங்கு 3 நாட்கள் அடைமழை பெய்ததால் அந்த மூன்று நாட்களும் படப்பிடிப்பு நடத்த முடியவில்லை. மழை நின்றபின், படப்பிடிப்பை தொடங்கி, தொடர்ந்து நடத்தினார்கள்.

விஜய் உள்பட சில நடிகர்-நடிகைகள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப கலைஞர்கள் மட்டும் ஜார்ஜியாவுக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தார்கள். வேலை முடிந்த தொழில்நுட்ப கலைஞர்கள் உடனே சென்னை திரும்பினார்கள்.

ஏற்கனவே திட்டமிட்டபடி, ஜார்ஜியா சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து விஜய் உள்பட பட கலைஞர்கள் அனைவரும் சென்னை திரும்பினார்கள். உலகம் முழுவதும் கொரோனா பயம் இருப்பதால், ‘விஜய் 65’ படக்குழுவினர் ஜார்ஜியாவில் இருந்து அவசரமாக சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது.

Related posts