சர்வதேச பாரதி விழா : பிரதமர் நரேந்திர மோடி உரை

பாரதியாரின் 138-வது பிறந்தநாளையொட்டி சர்வதேச பாரதி விழாவில் காணொலி வாயிலாக உரையாற்றிய பிரதமர் மோடி பழமை மற்றும் புதுமையை இணைத்து இந்தியாவை உருவாக்க பாரதி எண்ணினார் என கூறினார்.

138 ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, காணொலி வாயிலாக சர்வதேச பாரதி விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் பழனிச்சாமி வானவில் பண்பாட்டு மைய இயக்குநர், பாரதி குறித்து ஆய்வு செய்து வரும் ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வணக்கம் என்று தமிழில் கூறி உரையை தொடங்கினார் பிரதமர் மோடி , பாரதியார் விழாவில் கலந்துகொண்டதற்கு பெருமைப் படுகிறேன். பாரதியார் யார் என்று கேட்டால் அவ்வளவு எளிதாக கூறிவிட முடியாது. அவர் ஒரு தனிப்பட்ட பணியில் மட்டும் ஈடுபடவில்லை. பன்முகத் திறமைகளை கொண்டவர்

கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், சமூக சேவையாளர், விடுதலைப் போராட்ட வீரர் என பன்முகங்களைக் கொண்டவர். தனது பாடல்களின் மூலமாக மக்களிடம் எழுச்சியை ஊட்டியவர். பாரதிக்கும் வாரணாசிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பல சமூக சீர்திருத்தங்களைக் கொண்டிருந்தார்.

அவர் வாழ்ந்த 39 ஆண்டுகளில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அவரது எழுத்துகள் நம் எதிர்காலத்துக்கு வழிகாட்டுகின்றன. இன்றைய இளைய தலைமுறையினர் அவரை பின்பற்ற வேண்டும்.

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே

என்று பாடுகிறார் பாரதி. இளைஞர்கள் எவ்வளவு தடைகள் வந்தாலும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். பண்டைய இந்தியாவுக்கும் நவீன இந்தியாவுக்கும் இணைப்பாக செயல்பட்டார் பாரதி. பழமையையும் புதுமையையும் இணைக்க நினைத்தார்.

தமிழ் மொழியும், தாய்நாடும் இரண்டு கண்கள் என நினைத்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து, அவர்களின் முன்னேற்றத்தின் அவசியம் குறித்து தனது பாடல்கள் மூலமாக எடுத்துரைத்தார். பெண்கள் வலிமை பெற வேண்டும், ஆண்களுக்கு நிகராக பெண்களும் உயர வேண்டும் என எண்ணினார்.சுதந்திரப் போராட்டத்தில் துணிச்சலாக செயல்பட்டவர் பாரதி.

இனியொரு விதி செய்வோம்;
அதை எந்த நாளும் காப்போம்
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!

என்று பாடியவர் பாரதி. அவருடைய பாடல்களை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும்

Related posts