விஜய் – அட்லி திடீர் சந்திப்பு

விஜய் – அட்லி திடீர் சந்திப்பால், இந்தக் கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் – அட்லி இணைந்த முதல் படம் ‘தெறி’. அப்படத்துக்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ ஆகிய படங்களிலும் இணைந்து பணிபுரிந்தனர். இந்த மூன்று படங்களுமே விஜய்யின் வெற்றிப் படங்கள் பட்டியலில் இணைந்தன.
குறிப்பாக ‘பிகில்’ படத்தின் வசூல் தமிழகத்தில் அதற்கு முந்தைய அனைத்து சாதனைகளையும் தகர்த்தது. ‘பிகில்’ படத்தின்போதே, ஷாரூக்கான் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் அட்லி. அந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகளை நீண்ட நாட்களாகக் கவனித்து வருகிறார்.
இந்நிலையில், யாஷ் ராஜ் நிறுவனம் தயாரித்து வரும் ‘பதான்’ படத்தில் நடித்து வருகிறார் ஷாரூக்கான். இதனால் அட்லி படம் தாமதமானது. அடுத்த ஆண்டு அட்லி இயக்கவுள்ள படம், ராஜ்குமார் ஹிரானி இயக்கவுள்ள படம் ஆகியவற்றில் நடிக்க ஷாரூக்கான் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியானது.
இதனிடையே, நேற்று (டிசம்பர் 3) விஜய் – அட்லி சந்திப்பு நடைபெற்றது. அட்லியின் அலுவலகத்துக்கு வந்து அவரைச் சந்தித்துவிட்டு, விஜய் காரில் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பின் மூலம் விஜய் – அட்லி மீண்டும் இணையவுள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஷாரூக்கான் படத்தை முடித்துவிட்டு, விஜய் படத்தை இயக்கவுள்ளாரா அல்லது ஷாரூக்கான் படத்தின் தாமதத்தால் விஜய் படத்தை இயக்கவுள்ளாரா என்பது விரைவில் தெரியவரும்

Related posts