மஹர சிறைச்சாலையில் நடந்தது என்ன?

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது சிறைச்சாலை வைத்தியசாலையில் மருந்துகளை வைத்திருந்த கட்டிடத்தை உடைத்து சில மருந்துகளை கைதிகள் அருந்தியுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் (கட்டுப்பாட்டு) சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வன்முறையில் ஈடுபட்ட கைதிகளினால் சிறைச்சாலையின் பல்வேறு சொத்துக்களுக்கு சோதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் 2,750 கைதிகள் உள்ளதாகவும் அவர்களில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 1600 கைதிகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உணவு உண்ணும் இடத்தில் ஒன்றுகூடிய குறித்த 1600 கைதிகளும் கதவுகளை உடைத்து வௌியில் வந்து தங்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது சிறைச்சாலை அதிகாரி மற்றும் மேலும் சில அதிகாரிகள் கலந்துரையாட சென்றுள்ள போதிலும் கைதிகள் அவர்களை சுற்றிவளைத்து தாக்க முற்பட்டுள்ளதுடன் கற்களை வீசி எறிந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைதிகளுக்கு அறிவுறுத்தி போதிலும் அவர்கள் அடங்காத காரணத்தினால் ரபர் குண்டுகளால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் தெரிவித்த அவர் இதனையடுத்து சிறைச்சாலையில் மருந்துகள் வைத்திருந்த கட்டிடத்தில் இருந்த மனநோய் சம்பந்தமான மருந்துகள் மற்றும் மேலும் சில மருந்துகளை கைதிகள் பயன்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர்கள் மேலும் வன்முறையில் ஈடுபட்டுள்ளதுடன் சிறைச்சாலையின் பல சொத்துக்களை சேதப்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண, போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய கைதிகளே இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மருந்துகள் வைத்திந்த கட்டிடத்தில் மன அழுத்தம் மற்றும் தூக்க மருந்துகள் 21,000 இருந்ததாகவும் அவற்றை கைதிகள் அருந்தியுள்ளதாகவும் இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகள் சிலர் பித்து பிடித்தவர்கள் போல் நடந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் குறித்த மருந்துகள் எந்த காரணத்திற்காக எடுத்துவரப்பட்டன என்பன தொடர்பில் விசாரணைகள் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

—-

இட நெருக்கடி காரணமாக மஹர சிறைச்சாலை கலவரம் இடம்பெறவில்லை. ஜனாதிபதி மீது அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கிலான சூழ்ச்சியே இதன் பின்னணியில் இருப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

மனித இரத்தத்தை பார்க்கத் தூண்டும் போதை மாத்திரையொன்றை சிறைச்சாலைக்குள் விநியோகித்து சிறைச்சாலைக்குள் கலவர நிலைமையை உருவாக்கும் நோக்கத்துடனே மஹர சிறைச்சாலை சம்பவமும் நடந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

மஹர சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக இடம்பெற்ற சர்ச்சையின் போது கருத்துத் தெரிவித்த அவர், மேலும் தெரிவிக்கையில்,

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட நிலைமை தொடர்பாக நான் தனிப்பட்ட ரீதியில் தகவல்களை தேடிப்பார்த்தேன்.

இந்த சம்பவம் சிறைச்சாலையிலுள்ள இட நெருக்கடி நிலைமையால் ஏற்பட்டதல்லவென புலனாய்வு பிரிவுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. வெலிக்கடை சிறைச்சாலையில் ‘சமயங்’ என்ற குற்றவாளியின் சகாவான சத்துரங்க என்பவர் இருந்தார். அவர் வெலிக்கடை சிறைச்சாலையினுள் ‘ரிவர்ஸ்’ எனும் போதை மாத்திரையை கைதிகளுக்கு வழங்கி வந்தார்.

அந்த மாத்திரையை பயன்படுத்திய பின்னர் மனித இரத்தத்தை பார்க்க வேண்டும் என்ற வெறி வரும். வெலிக்கடை சிறைச்சாலைக்குள் அந்த மாத்திரைகளை விநியோகித்து கொலைகளை செய்வதற்கு தூண்ட எதிர்பார்த்துள்ளனர். போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பிரபல குழுவொன்றே சத்துரங்க என்ற நபரை வழிநடத்தியுள்ளது.

இதனை அறிந்த புலனாய்வுப் பிரிவினர் சத்துரங்க என்பவரை வேறு சிறைச்சாலைக்கு மாற்றியுள்ளனர். இதனால் வெலிக்கடையில் அதனை செய்ய முடியாது போயுள்ளது. ஆனால் மஹர சிறைச்சாலையில் இதனை நிறைவேற்றியுள்ளனர்.

இந்தச் சம்பவம் இட நெருக்கடி நிலைமையால் இடம்பெற்றதாக நினைக்கக் கூடாது. திட்டமிட்டு சிறைச்சாலையில் கொலை செய்யும் நிலைமையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோட்டாபய ராஜபக்‌ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்தில் இருந்ததை போன்று ஜனாதிபதி காலத்திலும் நடப்பதாக சர்வதேசத்திற்கு காண்பிப்பதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.

Related posts