பா.இரஞ்சித் வெளியிடும் குதிரைவால்

கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘குதிரைவால்’ படத்தை பா.இரஞ்சித் வெளியிடவுள்ளார்.
இயக்குநராக மட்டுமன்றி ‘பரியேறும் பெருமாள்’, ‘குண்டு’ உள்ளிட்ட படங்களையும் தனது நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் பா.இரஞ்சித். அடுத்ததாகப் படம் தயாரிப்பதற்குக் கதைகளும் கேட்டு வருகிறார்.
இதனிடையே, கலையரசன், அஞ்சலி பாட்டீல் நடித்துள்ள ‘குதிரைவால்’ படத்தை வெளியிடுகிறார் பா.இரஞ்சித். வழக்கமான படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை அறிமுக இயக்குநர்கள் மனோஜ் லியோனல் ஜாசன் – ஷ்யாம் சுந்தர் ஆகியோர் இயக்கியுள்ளனர். படத்தின் கதையை ராஜேஷ் எழுதியிருக்கிறார்.
உளவியல், ஆள் மன கற்பனைகள் , மற்றும் டைம் டிராவல் குறித்த ஒரு அறிவியல் புனைவுப்படமாகவும், வழக்கமான சினிமாவிலிருந்து மாறுபட்டதாகவும் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவில் இது ஒரு புதிய முயற்சியாகவும், புதிய அனுபவத்தைக் கொடுக்கும் விதமாகவும் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளனர்.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. யாழி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பலரும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Related posts