சூர்யாவை மட்டுமல்ல எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள் ?

சூர்யாவை மட்டுமல்ல எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள் என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்து உள்ளார்.

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப்போற்று’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் முடிவடைந்தது. இறுதி சுற்று படம் மூலம் பிரபலமான சுதா கொங்கரா இயக்கிய ‘சூரரைப்போற்று’ படத்தில் சூர்யாவுடன் மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நாயகியாக வருகிறார். ஜாக்கி ஷெராப், கருணாஸ், மோகன் பாபு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு மதுரையை சுற்றி உள்ள பகுதிகளில் நடந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கு ஆகியவற்றால் படம் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட்டது. ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் அதனை பூர்த்தி செய்யும் வகையில், ‘சூரரைப்போற்று’ திரைப்படம் அமேசான் பிரைமில் அக்டோபர் 30ந்தேதி வெளியிடப்படுகிறது என அறிவிப்பு வெளியானது. இதனால் முன்னணி நடிகர் ஒருவரின் திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.

இதுபற்றி நடிகர் சூர்யா கூறும்பொழுது, திரையரங்குகளில் தற்போது திரைப்படங்களை வெளியிட முடியாத சூழல் உள்ளது. கடுமையான உழைப்பில் தயாரான படங்களை, சரியான நேரத்தில் ரசிகர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும்.

ஒரு தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த முடிவை திரையுலகினர் புரிந்து கொள்ள வேண்டும். சூரரைப்போற்று திரைப்பட வெளியீட்டு தொகையில் இருந்து ரூ.5 கோடியை பகிர்ந்தளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்கள், திரையுலகை சார்ந்தவர்கள் மற்றும் கொரோனா முன்கள பணியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அவர் கூறினார்.

எனினும், இதற்கு திரைப்பட உரிமையாளர்கள் உள்ளிட்டோர் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. அவருக்கு ஆதரவாகவும் சிலர் பேசினர். இதுபற்றி இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள செய்தியில், சூரரை போற்று திரைப்படம் ஓ.டி.டி.யில் வெளியிடுவது என சூர்யா எடுத்த முடிவு வரவேற்கக்கூடியது. சூரரை போற்று, தமிழனை போற்றும். சூர்யாவை மட்டுமல்ல எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள் என அவர் தெரிவித்து உள்ளார்.

Related posts