சினிமாவை விட்டு விலகல்: சஞ்சய்தத்தின் படங்களின் கதி ?

சினிமாவை விட்டு விலகும் முடிவால், சஞ்சய்தத்தின் ரூ.735 கோடி படங்களின் கதி என்ன என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது.

பிரபல இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு கடந்த 9-ந்தேதி மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சு வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளார். அவருக்கு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு உள்ளது. இதனால் வீட்டில் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் சினிமாவை விட்டு விலகுவதாக சஞ்சய் தத் திடீரென்று அறிவித்து உள்ளார்.

தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள கடிதத்தில். ‘’மருத்துவ காரணங்களுக்காக பணியிலிருந்து நான் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொள்கிறேன். எனது நலவிரும்பிகள் கவலைப்பட வேண்டாம். விரைவில் திரும்பி வருவேன்” என்று குறிப்பிட்டு இருந்தார். இதனால் அவரை வைத்து படம் எடுத்து வந்த தயாரிப்பாளர்கள் தவிப்பில் உள்ளனர். மகேஷ்பட் இயக்கிய சடக் 2 படத்துக்கு டப்பிங் பேசி முடித்து விட்டதால் தப்பியது. இந்த படம் வருகிற 28-ந்தேதி ஓ.டி.டியில் வெளியாகிறது. மேலும் அவர் நடித்து வந்த தோர்பஷ், பூஜ், கே.ஜி.எப்2, ஷாம்ஷேரா, பிரித்விராஜ், ஆகிய படவேலைகள் முடியாமல் உள்ளன. இந்த படங்களுக்கு ரூ.735 கோடி முதலீடு செய்து இருப்பதாகவும், இவற்றின் கதி என்ன ஆகுமோ என்றும் படக்குழுவினர் புலம்புகிறார்கள்.

Related posts