நான் பெரும் புகழோடு வாழ காரணம் கே.பாலச்சந்தர்

நான் பெரும் புகழோடு நல்ல வசதியுடன் வாழ காரணம் கே.பாலச்சந்தர் சார் தான் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்

நடிகர் ரஜினிகாந்த் மறைந்த இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து செய்தியை வீடியோவாக சமூக வலைதலத்தில் பதிவிட்டிருந்தார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:-

இன்று என் குருவான கே.பி அவர்களின் 90-வது பிறந்தநாள். கே பாலசந்தர் அறிமுகப்படுத்தாவிட்டாலும் நான் நடிகனாக ஆகியிருப்பேன். கன்னட மொழியில் சின்னச்சின்ன கேரக்டரில் நடித்திருப்பேன்.

ஆனால், இன்று நான் பெரும் புகழோடு நல்ல வசதியுடன் வாழ காரணம் கே.பாலச்சந்தர் சார் அவர்கள் தான். என்னுடைய மைனஸ் பாயிண்ட் எல்லாம் நீக்கி எனக்குள் இருக்கும் பிளஸ் பாயிண்ட்களை எனக்கு தெரிவித்து முழு நடிகனாக்கி நான்கு படங்களில் எனக்கு நல்ல கேரக்டர் கொடுத்து ஒரு நட்சத்திரமாக தமிழ் திரையுலகத்திற்கு என்னை அறிமுகப்படுத்தினார்.

என் வாழ்க்கையில் அப்பா அம்மா அண்ணா இவர்கள் வரிசையில் கே.பி இருக்கிறார்.

எனக்கு மட்டுமல்ல இன்னும் எத்தனையோ நடிகர்கள். அவரால் வாழ்ந்தவர்கள் பலபேர். நான் பல இயக்குனர்களிடம் பணியாற்றி உள்ளேன். ஆனால் கே பாலச்சந்தர் அவர்களோடு பணியாற்றும் பொழுது திரைப்படம் சூட்டிங் பகுதியில் லைட் செட் போடக்கூடிய எங்கேயோ ஒரு மேலே உட்கார்ந்து இருக்கும் நபர் கூட அங்கிருந்து எழுந்து வணக்கம் செலுத்துவார். அதுபோன்ற ஒரு கம்பீரம் கே.பி அவர்களிடம் இருந்தது. அது யாருகிட்டயும் இருந்ததில்லை.

கே.பி வாழ்ந்த காலத்தில் தந்தையாக, கணவனாக, மகனாக இயக்குனராக அனைத்திலும் பர்பெக்ட்டாக விளங்கினார். இன்னும் நிறைய நாட்கள் அவர் வாழ்ந்திருக்கலாம்.

மிகப்பெரிய மகான் எத்தனை பேருக்கு வாழ்க்கை கொடுத்து ஒரு அர்த்தத்தோடு வாழ்ந்த என்குரு அவர்களை நினைவு கூறுவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ரஜினிகாந்த் அந்த வீடியோவில் கூறி உள்ளார்.

Related posts