அதர்வா தம்பி பெண் டைரக்டருடன் காதல் திருமணம்

நடிகர் அதர்வாவின் தம்பி ஆகாஷ், விஜய் குடும்பத்து மாப்பிள்ளை ஆகிறார். மணமகள், ஒரு படத்தை டைரக்டு செய்தவர். இது, காதல் திருமணம்.

மறைந்த நடிகர் முரளிக்கு 2 மகன்கள், ஒரு மகள் இருக்கிறார்கள். மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. மூத்த மகன் அதர்வா, தமிழ் பட உலகின் இளம் கதாநாயகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வளர்ந்து வரும் இவர், தமிழ் பட உலகில் தனக்கென்று ஒரு தனி மார்க்கெட் உருவான பின், திருமணம் செய்து கொள்வதாக கூறி வருகிறார்.

இந்த நிலையில், அதர்வாவின் தம்பி ஆகாஷ் காதல் வலையில் சிக்கியிருக்கிறார். இவர் சிங்கப்பூரில், “எம்.பி.ஏ.” படித்து வருகிறார். இவருக்கும், நடிகர் விஜய்யின் உறவுப்பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்து இருக்கிறது.

பெண் டைரக்டர்

அந்த பெண்ணின் பெயர், சினேகா பிரிட்டோ. விஜய்யின் அத்தை மகள். டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் தங்கை மகளான இவர், ‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் 2-பாகத்தை டைரக்டு செய்தவர். இவர்களின் காதலுக்கு முதலில் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இருவரும் வேறு வேறு மதங்களை சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களின் காதலை ஏற்க பெற்றோர்கள் தயங்கினார்கள்.

என்றாலும் ஆகாசும், சினேகா பிரிட்டோவும் தங்கள் காதலில் உறுதியாக இருந்தார்கள். அதனால் இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது என்ற முடிவுக்கு பெற்றோர்கள் வந்தனர். அதன்படி, ஆகாஷ்-சினேகா பிரிட்டோ திருமண நிச்சயதார்த்தம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது.

Related posts