இம் முறை 20 ஆசனங்களை பெற உத்தேசித்துள்ளோம்

இம் முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் 20 ஆசனங்களை பெறுவதற்கு உத்தேசித்துள்ளோம் என முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்தார்.

திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (25)இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் கருத்துரைக்கையில்,

கடந்த முறை தேர்தலில் 14 ஆசனங்களை பெற்றோம் இம் முறை வட கிழக்கில் போட்டியிடுகிறோம்.

யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற மாவட்டங்களில் களமிறங்கியுள்ளோம். இதனால் 20 ஆசனங்களை பெற்று பலன் மிக்க அணியாக பாராளுமன்றத்தில் திகழ்வோம்.

அரசியல் தீர்வு ஒன்று கிடைக்கப்பெற வேண்டும் அரசியல் சாசனம் மூலமாக இது நடை பெற வேண்டும் என ஏற்றுக் கொள்ளப்படல் வேண்டும் மக்களுடைய ஆணை மூலமாக சர்வதேச சமூகமும் இதனை நல்க வேண்டும்.

13 ஆவது அரசியல் சாசனம் முதன் முறையாக உருவாக்கியதன் பிற்பாடு மாகாண மத்திய அதிகார பகிர்வு இடையில் உருவாக்கப்பட்டது. இந்த சாசனம் முழுமையானதாக இருக்கவில்லை பல குறைகளை கொண்டிருந்தது.1988 மாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமான கட்சியாக இருந்த போதும் தேர்தலில் அப்போது போட்டியிடவில்லை புதிய அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து.

எந்த அரசாங்கம் வந்தாலும் புதிய அரசியல் சாசனம் மூலமாக தேசிய பிரச்சினைக்கு தீர்வு உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

-திருகோணமலை நிருபர் கீத்-

Related posts