சினிமாவில் வளரவிடாமல் தடுத்த சல்மான்கான் – டைரக்டர் பாய்ச்சல்

சினிமாவில் வளரவிடாமல் தடுத்த சல்மான்கான் என்று டைரக்டர் அபினவ் சிங் குற்றம் சாட்டி உள்ளார்.
இந்தி பட உலகம் முன்னணி நடிகர்கள் சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும், இளம் நடிகர்களை அவர்கள் வளர விடுவதில்லை என்றும் குற்றச்சாட்டு உள்ளது. சுஷாந்த் சிங் ராஜ்புத் இவர்களிடம் தாக்குப்பிடிக்க முடியாமல் மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறுகின்றனர். இந்த நிலையில் நடிகர் சல்மான்கான் தனது திரையுலக வாழ்க்கையை நாசம் செய்து விட்டதாக இயக்குனர் அபினவ் சிங் குற்றம் சாட்டி உள்ளார். இவர் 2010-ல் சல்மான்கான் நடிப்பில் வெளியான தபாங் படத்தை இயக்கி இருந்தார். அபினவ் சிங் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

“சுஷாந்த் சிங் ராஜ்புத்தை தற்கொலைக்கு தள்ளி உள்ளனர். திறமைக்கு வாய்ப்பு தராமல் புறக்கணிக்கும் அவலத்தை நானே சந்தித்தேன். எனக்கு வந்த பட வாய்ப்புகளை தடுத்தனர். என்னை வைத்து படம் எடுக்க வந்தவர்களையும் மிரட்டினர். இதனால் நான் வாங்கிய சம்பள முன் பணம் ரூ.7 கோடியை ரூ.90 லட்சம் வட்டியுடன் திருப்பி கொடுக்க வேண்டி வந்தது.

நான் இயக்கிய பேஷாராம் படத்தை வெளியிட விடாமல் தடுத்தனர். போலீசில் புகார் அளித்தும் பயன் இல்லை. சலீம்கான், சல்மான்கான், அர்பாஸ் கான், சொஹைல்கான் ஆகியோர் தான் எனக்கு எதிராக செயல்பட்டனர். பண பலம், அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி எல்லோரையும் அச்சுறுத்துகிறார்கள். நான் சுஷாந்த் சிங் ராஜ்புத் போல இவர்களை விட்டு விடப்போவது இல்லை. அவதிப்படும் நடிகர்கள் எனக்கு உதவ வேண்டும்”.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts