ராதாரவி என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியவில்லையே சாமி !

குடியுரிமைச் சட்டத்தை அன்று ஆதரித்துக் கையெழுத்திட்டவர்கள், இன்று எதிர்த்துக் கொடி பிடிக்கிறார்கள் என்று ‘தமிழரசன்’ இசை வெளியீட்டு விழாவில் ராதாரவி பேசினார்.

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன், சுரேஷ் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தமிழரசன்’. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (டிசம்பர் 29) நடைபெற்றது.

இதில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், இயக்குநர் பாரதிராஜா, ராதாரவி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் ராதாரவி பேசியதாவது:

“இந்திப் பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த தமிழ் ரசிகர்களை, தமிழ் பாட்டுக் கேட்க வைத்தவர் அண்ணன் இளையராஜா மட்டும் தான். அவரைப் பார்த்து சினிமாவுக்கு வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனாலும், இளையராஜா அண்ணன் மாதிரி யாராலும் முடியாது.

விஸ்வநாதன் – ராமமூர்த்தியின் பாடல்களை ரொம்பவே ரசிப்பேன். பிறகு, இளையராஜா பாடல்களைப் பிடிக்கும். உண்மையில் அவர் தான் என்னைக் கெடுத்தவர். ஏனென்றால் ‘பூவே செம்பூவே’ ஹிட்டுக்குப் பிறகு யாருமே என்னை ஹீரோவாக கூப்பிட்டதில்லை. வில்லனுக்குத்தான் அழைப்பார்கள்.

இளையராஜாவும் – முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் ஒன்று தான். இருவரும் என்ன காமெடி பண்ணினாலும் சிரிக்கவே மாட்டார்கள். ஆனால், இளையராஜாவை அதிகமாகச் சிரிக்க வைத்தது நான்தான். பாரதிராஜாவின் தம்பி மகன் திருமணத்தில் இளையராஜா அண்ணனுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தேன். அவ்வளவு சிரித்தார். லட்சங்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தபோது, நான் எடுத்த 4-வது படத்துக்கு 25 ஆயிரம் சம்பளத்துக்கு வாசித்துக் கொடுத்தார்.

இயக்குநர் பாரதிராஜாவிடம் வாய்ப்பு கேட்டு அலுத்துவிட்டது. இப்போது அவர் என் நடிப்புத் துறைக்கு வந்துவிட்டார். இனிமேல், அவரிடம் வாய்ப்பு கேட்க முடியாது. விஜய் ஆண்டனி அவருக்குத் தகுந்தாற் போன்ற கதைகளிலேயே நடித்து வருகிறார். கொஞ்சம் வெளியே சென்றால் மாட்டிக் கொள்கிறார். அவருக்கு என்ன வருகிறதோ, அதையே செய்ய வேண்டும். ‘நான்’, ‘பிச்சைக்காரன்’ படத்தில் எப்படியிருந்தாரோ அதைப் போன்று ‘தமிழரசன்’ படம் இருக்கும். கதையை முழுமையாகக் கேட்டு நடிக்கிறோம் என்பது பொய். முழுக் கதையும் கேட்டு அது நமக்குச் சரியா என்று நடிக்கிற ஒரே ஹீரோ விஜய் ஆண்டனிதான்.

மலேசியா போயிருந்தேன். மலேசியாவில் தயாரான தமிழ்ப் படத்தில் நடிக்கச் சென்றேன். பாஸ்போர்ட் வைத்துச் சென்றபோது, டூரிஸ்ட்டா என்று கேட்டார்கள். ஆமாம் என்றேன். 2 நாட்களுக்குப் பிறகு என்னைப் பிடித்துவிட்டார்கள். நடிக்க வந்துவிட்டு, ஏன் அதற்கான அனுமதி வாங்கவில்லை என்று திரும்ப அனுப்பிவிட்டார்கள். பின்பு அதற்கான அனுமதி வாங்கிவிட்டுத்தான் சென்றேன். அப்போது தான் நம்மை இவ்வளவு துன்புறுத்துகிறார்களே, இவர்களுக்கெல்லாம் ஒரு சட்டம் வராதா என நினைத்தேன். இப்போது தான் குடியுரிமைச் சட்டம் வந்துள்ளது.

3 வருடம்தான் வேலை என்று துரத்திவிடப்பட்டவர்கள், இங்கு வந்து இந்தச் சட்டம் தவறு எனக் கத்திக் கொண்டிருக்கிறார்கள். என் வீட்டில் இருப்பவர்கள் வாடகை கொடுக்கவில்லை என்றால், நான்தான் சண்டை போட்டுத் துரத்திவிடுவேன். அதில் எதிர்வீட்டுக்காரன் தலையிட வேலையே இல்லை. இங்கிருப்பவர்கள் யாரையாவது வெளியே போகச் சொன்னார்களா? அமைதியாக இருங்கள் என்று சொல்ல வேண்டும்.

இந்த நேரத்தில் தேர்தல் வந்து தொலைஞ்சுடுச்சு. இந்தச் சட்டத்துக்கு யாரெல்லாம் முதலில் ஆதரவு கையெழுத்துப் போட்டார்களோ, அவர்கள் அனைவரும் இப்போது எதிர்ப்புக் கொடி பிடித்து நிற்கிறார்கள். ஒரு ஆள் கூட கேட்கவில்லை. இது நாதியற்ற தமிழ்நாடு. நாதியுள்ள தமிழ்நாடாக மாற, நல்லவர்கள் வரவேண்டும்”.
இவ்வாறு ராதாரவி பேசினார்.

Related posts