பொங்கலுக்கு முன்னால் வருகிறது ரஜினியின் தர்பார்

‘பேட்ட‘ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘தர்பார்’ படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

கதாநாயகியாக நயன்தாரா மற்றும் பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன், ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், ஸ்ரீமன் உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். தாதாக்களுக்கும் போலீசுக்கும் நடக்கும் மோதலை மையமாக வைத்து எடுத்துள்ளனர். பெரும்பகுதி படப்பிடிப்பு வட மாநிலங்களில் நடந்துள்ளது. படத்தில் அனிருத் இசையில் விவேக் எழுதி எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடிய ‘சும்மா கிழி நான்தாண்டா இனிமேலு வந்து நின்னா தர்பாரு’ என்ற அரசியல் பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. தர்பார் படம் ஜனவரி 15-ந்தேதி பொங்கல் பண்டிகையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் திரைக்கு வரும் என்று அறிவித்து இருந்தனர்.

இந்தநிலையில் பொங்கலுக்கு முன்னதாக ஜனவரி 9-ந்தேதியே தர்பார் படத்தை திரைக்கு கொண்டு வரலாமா என்று ஆலோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் மூலம் பொங்கலுக்கு முன்பும் பின்பும் 2 வாரங்கள் தொடர்ச்சியாக நல்ல வசூல் பார்க்க முடியும் என்று எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

Related posts