யாழில் ஜனாதிபதி ரணிலை பாராட்டிய வடக்கு ஆளுநர்

தலைமைத்துவத்துக்கான சிறந்த வெளிப்பாடு; சிறந்த தலைவர் ஒருவர் செயற்படக்கூடிய விதம் இதுவே. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்த தலைவர் எமது ஜனாதிபதி என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதி திறந்து வைக்கப்பட்ட இன்றைய (24) நிகழ்வில் உரையாற்றியபோதே வடக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ். பல்கலைக்கழகத்துக்கான பாரிய மைல்கல் நிகழ்வாக இன்றைய நிகழ்வு அமைந்துள்ளது.

நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த இந்த கட்டட தொகுதியை விரைவில் திறந்து, பயன்பாட்டுக்கு வழங்குமாறு கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்தேன். கோரிக்கையை ஏற்று, மே மாதம் கட்டடம் திறக்கப்படும் என அவர் கூறினார்.

அதன் பின்னர் ஒரு தடவை கூட இது தொடர்பில் பேசவில்லை. எனினும், வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஜனாதிபதி அவர்கள் இன்றைய தினம் இந்த கட்டடத்தை திறந்து வைத்துள்ளார். இதுவே தலைமைத்துவத்துக்கான சிறந்த வெளிப்பாடு. சிறந்த தலைவர் ஒருவர் செயற்படக்கூடிய விதம் இதுவே.

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்த தலைவர் எமது ஜனாதிபதி. அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலத்தில், மின்சாரமின்றி நாடு இருளுக்குள் கிடந்தபோது தலைமைத்துவத்தை பொறுப்பேற்று சவால்களை வெற்றிகொண்டார்.

பல சவால்களை தனி நபராக எதிர்கொண்டு, நாட்டை மாற்றியமைத்தார். இவ்வாறான ஜனாதிபதியின் பிரதிநிதியாக வடக்கில் ஆளுநராக சேவையாற்றுவதில் பெருமிதம் அடைகின்றேன் என்றார்.

Related posts