உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பான ஜனாதிபதி விசாரணை அறிக்கையில் பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதை அரசாங்கம் கவனத்திற் கொள்ளவில்லை.

இவ்விவகாரம் தொடர்பில் கேள்வி எழுப்பும் போது அதற்கு பதிலளிக்காமல் இழுத்தடிப்பினை மாத்திரமே அரசாங்கம் முன்னெடுக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன அதிருப்தி வெளியிட்டார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (7) இடம்பெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்களின் போது காவிந்த ஜயவர்தன உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் குறித்து கேள்வியெழுப்பினார்.

இந்த கேள்விகளுக்கு இரண்டு மாதங்களுக்கு பின்னர் பதிலளிப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சார்பில் சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த சபையில் குறிப்பிட்டார்.இதற்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன தொடர்பில் சட்டமா அதிபர் ஊடாக பரிசீலனைகளை மேற்கொண்டு அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யுமாறும்,பொலிஸ் ஆணைக்குழுவினால் ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கேள்விகள் முன்வைக்கும் போது அதற்கு பதிலளிப்பதற்கு விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர் சபைக்கு வருகை தருவதில்லை.பதிலளிப்பற்கு இரண்டு மாதங்கள் காலவகாசம் மாத்திரம் கோரப்படுகிறது.நான் மூன்றாவது தடவையாக கேள்விகளை முன்வைத்துள்ளேன்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்துவதற்கு அரசாங்கம் ஏன் பின்வாங்குகிறது என்பது பிரச்சினைக்குரியதாக உள்ளது.அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்த அரசாங்கத்துக்கு தார்மீக உரிமை உண்டு என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த இந்த கேள்விகள் முதலாவது முறையாக முன்வைக்கப்பட்டுள்ளதாக ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு காலவகாசம் கோருவதற்கு அமைச்சருக்கு அதிகாரம் உண்டு.ஆகவே இவ்விடயம் தொடர்பில் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அறிவிக்கிறேன் என்றார்.

Related posts