ஜெயம் ரவியின் ‘சைரன்’ ட்ரெய்லர் எப்படி?

ஜெயம் ரவி நடித்துள்ள ‘சைரன்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் ‘சைரன்’. ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘இறைவன்’ ஏமாற்றத்தைக் கொடுத்தது. முன்னதாக வெளியான ‘அகிலன்’ படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்தச் சூழலில் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கும் இப்படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். சமுத்திரகனி, யோகிபாபு, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி? – மொத்த ட்ரெய்லரும் விறுவிறுப்பாக கடக்கும் வகையில் வெட்டபட்டுள்ளது. “நிறைய கேஸ்ல டாக்டர் சொல்றது, 5 நிமிஷம் முன்னாடி கொண்டு வந்திருந்தா காப்பாத்தியிருக்கலாம். அந்த 5 நிமிஷம் நம்ம கையில தான் இருக்கு” என வசனம் மூலம் ஜெயம் ரவி ஆம்புலன்ஸ் ட்ரைவர் என்பதை உணர முடிகிறது. மேலும் அவர் சிறையிலிருந்து வெளியே வரும் காட்சி, பொய்யான கொலைக்குற்றச்சாட்டுக்கு ஆளாகி தன்னை நிரபராதி என நிரூபிக்கும் போராட்டமாக தெரிகிறது.

இருவேறு தோற்றங்களில் காட்சியளிக்கிறார் ஜெயம் ரவி. போலீசாக வரும் கீர்த்தி சுரேஷ் ‘ரக’டாக நடந்து கொள்ள முயல்கிறார். ஆனால், அந்த ஆக்ரோஷம் அவருக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை என தெரிகிறது. குறிப்பாக இறுதியில் ‘யாருயா சொன்னது’ என கோபம் கொள்ளும் காட்சியில் அழுத்தம் இல்லை. இடையில் அனுபமா பரமேஸ்வர், மகள் சென்டிமென்ட் காட்சிகள் வெகுஜன சினிமாவுக்கான அம்சங்களுடன் வந்து செல்கிறது. படம் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

Related posts