நினைவேந்தலில் கைது செய்யப்பட்டவர்களுக்கு விளக்கமறியல்!

மட்டக்களப்பு – வவுணதீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றி நினைவேந்தலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட அமைப்பாளர் அவரது மகன் உட்பட்ட இருவரையும் எதிர்வரும் பெப்பிரவரி 7 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டு. நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (24) உத்தரவிட்டார்.

கடந்த வருடம் நவம்பர் 27 ஆம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் குககுலராஜா (குகன்) அவரது மகன் ஆகியேர் வவுணதீவு பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் மாவீரர்களுக்கான விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்காக நீதிமன்ற அனுமதியை கோரி விசாரணை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக நேற்று நீதவான் நீதிமன்றில் எடுக்கப்பட்ட போது அவர்கள் இருவரையும் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

Related posts