மாற்றங்களை நிகழ்த்தியவர் கருணாநிதி : சூர்யா

“பராசக்தி வெளியாகி 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்து மனிதர்கள் இழுக்கும் கை ரிக்‌ஷாவை ஒழித்தவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. முதலில் அவர் ஒரு படைப்பாளி. அப்படிப்பட்ட படைப்பாளிக்கு கலைத் துறையினர் சேர்ந்து நூறாவது ஆண்டு விழா எடுப்பதை முக்கியமான விழாவாக பார்க்கிறேன்” என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள், ரஜினி, கமல் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் கலந்துகொண்டுள்ளனர்.

நிகழ்வில் பேசிய நடிகர் சூர்யா, “சமூகத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்ற ட்ரெண்டை உருவாக்கியதே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தான். அரசியலில் பல மாற்றங்களை கொண்டு வந்தவர். பெண்களுக்கு சொத்தில் சம உரிமையாகட்டும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள் என பல்வேறு மாற்றங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

அத்துடன் சினிமாவை அவர் ஒருபோதும் கைவிடவில்லை. அதனால்தான் அவரை மரியாதையாக ‘கலைஞர்’ என அழைக்கிறோம். ‘பராசக்தி’ படத்தில் கை ரிக்‌ஷா இழுத்து வருபவரை பார்த்து சிவாஜி வருத்தப்பட்டு பேசுவார். அப்போது காவலர் ஒருவர், ‘நீ வேணும்னா ஆட்சிக்கு வந்து மாத்திக்காட்டேன்’ என சொல்லும் வசனம் ஒன்று படத்தில் வரும். ‘பராசக்தி’ வெளியாகி 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்து மனிதர்கள் இழுக்கும் கை ரிக்‌ஷாவை ஒழித்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி.

முதலில் அவர் ஒரு படைப்பாளி. அப்படிப்பட்ட படைப்பாளிக்கு கலைத்துறையினர் சேர்ந்து நூறாவது ஆண்டு விழா எடுப்பதை முக்கியமான விழாவாக பார்க்கிறேன். கருணாநிதிக்கும், அவரது எழுதுகோலுக்கும் என் மரியாதைகள். அவரை பார்த்துள்ளேன், ஆசீர்வாதம் பெற்றுள்ளேன் என நினைக்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார் சூர்யா.

Related posts