டிசம்பரில் பணவீக்கம் 4 சதவீதமாக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மதிப்பீட்டின் பிரகாரம் கடந்த நவம்பர் மாதம் 3.4 சதவீதமாகப் பதிவாகியிருந்த பணவீக்கம், டிசம்பர் மாதம் 4 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.

அதன்படி கடந்த நவம்பர் மாதத்தில் 3.6 சதவீதமாகப் பதிவான உணவுப்பணவீக்கம் டிசம்பரில் 0.3 சதவீதமாகவும், நவம்பரில் 6.8 சதவீதமாகப் பதிவான உணவல்லாப்பணவீக்கம் டிசம்பரில் 5.8 சதவீதமாகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.

மேலும் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் டிசம்பர் மாதத்தில் 0.89 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. இதற்கு உணவுப்பொருட்களின் விலைகளில் அவதானிக்கப்பட்ட 1.16 சதவீத அதிகரிப்பும், உணவல்லாப்பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள், கட்டணங்களில் அவதானிக்கப்பட்ட 0.27 சதவீத வீழ்ச்சியும் காரணமாக அமைந்துள்ளன.

அதேவேளை பொருளாதாரத்தின் அடிப்படைப்பணவீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப்பணவீக்கம் கடந்த நவம்பர் மாதத்தில் பதிவான 0.8 சதவீதத்திலிருந்து டிசம்பரில் 0.6 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இது இவ்வாறிருக்க பொருத்தமான கொள்கை வழிமுறைகள் மற்றும் நன்கு நிலைநிறுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்க்கைகள் என்பவற்றின் மூலம் துணையளிக்கப்பட்டு, பணவீக்கமானது நடுத்தரகாலத்தில் 5 சதவீதம் எனும் இலக்கிடப்பட்ட மட்டத்தை அண்மித்து ஸ்திரமடையும் என மத்திய வங்கி எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளது.

——-

ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படும் வற் வரி திருத்தத்தின் காரணமாக நீர்க் கட்டணமும் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வர்த்தகப் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் பியல் பத்மநாத இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி நீர் கட்டணம் 03 வீதத்தால் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts