திரை விமர்சனம்: ஃபைட் கிளப்

கால்பந்தாட்டத்தில் சாதிக்க வேண்டும் என்கிற செல்வாவின் (விஜயகுமார்) கனவுக்கு உதவ வருகிறார், அவர் பகுதியைச் சேர்ந்த பெஞ்சமின் (கார்த்திகேயன் சந்தானம்). இந்நிலையில், போதைப் பொருள் விற்கும் ஜோசப் (அவினாஷ் ரகுதேவன்), தன் நண்பன் கிருபாகரனுடன் (சங்கர் தாஸ்)சேர்ந்து, தனது தொழிலை எதிர்க்கும் சொந்த அண்ணன் பெஞ்சமினைக்கொன்றுவிடுகிறார்.

இந்தக் கொலைக்காக ஜோசப் சிறை செல்ல, கிருபாகரன் அரசியல்வாதியாக வளர்கிறார். செல்வாவின் கால்பந்தாட்ட கனவு சிதைகிறது. சிறையில் இருந்து வெளியே வரும் ஜோசப், கிருபாகரனை அழிக்க செல்வாவைப் பயன்படுத்துகிறார். அவர் திட்டம் நிறைவேறியதா? செல்வாவின் வாழ்க்கை என்னவாகிறது என்பது கதை.

ஒரு கேங்ஸ்டர் கதையை வித்தியாசமாகச் சொல்லமுயற்சி செய்திருக்கிறார், அறிமுக இயக்குநர் அப்பாஸ் ரஹ்மத்.அதற்கு அவரின் ‘மேக்கிங்’கும், அதிரடியாக மிரட்டும் சண்டைக் காட்சிகளும் அழகாகக் கைகொடுத்திருக்கின்றன. ஆனால், முதல் பாதிவரை எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைக்கதை, இரண்டாம் பாதிக்குப் பிறகு வழக்கமான, வட சென்னை கதையாகி, தடுமாறத் தொடங்கிவிடுகிறது.

மூன்று கதாபாத்திரங்களை மையப்படுத்திய கதை என்பதால், அவர்களும் அவர்களைச் சுற்றிய துணைகதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். ஆனால், காட்சி அமைப்புகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

கோபக்கார இளைஞர் கேரக்டரில் அம்சமாகப் பொருந்துகிறார், ‘உறியடி’ விஜயகுமார். சண்டைக் காட்சிகளில் அவரின் ஆக்ரோஷம் அழகாக வெளிப்படுகிறது. ஜோசப்பாக நடித்துள்ள அவினாஷ்ரகுதேவன், துரோகத்தின் வலியை பார்வையிலேயே கொண்டு வருகிறார். வில்லனாக வரும் சங்கர் தாஸ் வெறுப்பான ஒரு மனிதரை கண்முன் நிறுத்துகிறார்.

பெஞ்சமினாக வரும் கார்த்திகேயன் சந்தானம், சரவண வேல், விஜயகுமாரின் தந்தையாக வரும் கோவிந்த மூர்த்தி உட்பட அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். கதாநாயகி மோனிஷா மோகன் மேனன் பாதியிலேயே சென்றுவிடுவதால் அவருக்கு அதிக வாய்ப்பில்லை.

படம் தொழில்நுட்ப ரீதியில் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசைகதையை பரபரப்பாக்க உதவுகிறது. ‘தளபதி’ஓடும் திரையரங்கு மற்றும் தெருவிளக்கு ஒளியில் நடக்கும் சண்டைக்காட்சிகளில் மிரட்டுகிறது, லியோன் பிரிட்டோவின் ஒளிப்பதிவு. நான் லீனியர் முறையில் காட்சிகளைச் சேர்த்திருப்பது, கிளைமாக்ஸ்காட்சியின் பேரலல் எடிட்டிங் என கிருபாகரனின் அபார படத் தொகுப்பு, படத்தின் வேகத்தைக் கூட்ட உதவி இருக்கிறது.

படம் முழுவதும் கஞ்சா புகையும் மதுபாட்டில்களும் தாராளமாகப் புழங்குவது ஒரு கட்டத்தில் எரிச்சலையே தருகின்றன.ஆக் ஷன் காட்சிகளும் கணக்கு வழக்கில்லாமல் வருகின்றன. கிருபாவால் பாதிக்கப்பட்டிருக்கும் ஜோசப்பும் ரவுடிதான். அவரே கிருபாவை நேரடியாகப் பழிவாங்காமல், ஹீரோவை இதற்குள் இழுத்துவிடுவது ஏன் என்பது போன்ற கேள்விகள்எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.

‘வட சென்னைன்னா வெட்டுக் குத்து ரத்தம்தான்’என்பது போல் வரும் படங்களின் லிஸ்டில் இதுவும் சேர்ந்திருக்கிறது, இன்னொன்றாக

Related posts