சினிமாவில் 21 ஆண்டுகள் குறித்து அமீர் நெகிழ்ச்சி

‘மௌனம் பேசியதே’ திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், ரசிகர்களுக்கு இயக்குநர் அமீர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார் , இது குறித்து அமீர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

“மரியாதைக்குரிய பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும், பேரன்புக்கும் பாசத்துக்கும் உரிய தமிழக மக்களுக்கும் என் அன்பு கலந்த வணக்கம். கடந்த ஒரு மாதத்துக்கு முன் என்னை வீழ்த்துவதற்காக அவதூறுகளையும், அவமானங்களையும் பொதுவெளியில் எனக்கு சிலர் அன்பளிப்பாக கொடுத்தபோது நான் சோர்ந்து விடாமலும், துவண்டு விழாமலும் பார்த்துக் கொள்ளும் விதமாக எனக்கு தன்னம்பிக்கையையும், அன்பையும், ஆதரவையும் எதிர்பாராத அளவிற்கு எனக்கு அளித்த தமிழக ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும், ஊடகத்துறையினருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். ஒரு இயக்குநராக எனக்கு அடையாளத்தை பெற்றுத் தந்த என்னுடைய முதல் திரைப்படம் ‘மௌனம் பேசியதே’ வெளியாகி இன்றோடு 21 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது.

இந்த நெகிழ்வான தருணத்தை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சென்னை நோக்கி, சினிமாவை நோக்கி படையெடுத்து வந்த எல்லோரது கனவும் நனவாவது இல்லை, அப்படி கனவுகளை சுமந்து கொண்டிருந்த கூட்டத்தில் ஒருவனாக இருந்த என்னை கரம் பிடித்து உயர்த்தி என்னுடைய திரை கனவை நினைவாக்கியர் ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள் கணேஷ் ரகு மற்றும் வெங்கி நாராயணன் உள்ளிட்ட அபராஜித் பிலிம்ஸ் நிறுவனத்தாருக்கும் என்னோடு பயணித்து திரைப்படத்தின் வெற்றிக்கு கரம் கொடுத்த சூர்யா, த்ரிஷா, லைலா உள்ளிட்ட நடிகர் நடிகைகளுக்கும் ஒளிப்பதிவாளர் ராம்ஜி மற்றும் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு என் நன்றிகள்.

என்னுடைய திரை பயணம் தொடங்கிய இந்த 21 ஆண்டுகளில் நான் இயக்கிய படங்கள் குறைவாக இருந்தாலும், இன்னும் என்னை மனதில் நிறுத்தி தொடர்ந்து சமூக வலைதளங்களில், ஊடகங்களில் ஆதரவு தந்து கொண்டிருக்கிற திரையரசிகர்களுக்கும், ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும், தமிழக மக்களுக்கும் குறிப்பாக மௌனம் பேசியதே ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்” இவ்வாறு அமீர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Related posts