லேடி சூப்பர் ஸ்டார் என்றாலே திட்டுகிறார்கள்

லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லாதீர்கள். அப்படிச் சொன்னாலே திட்டுகிறார்கள்” என நடிகை நயன்தாரா கூறியுள்ளார்.
நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நயன்தாரா, ஜெய் நடித்துள்ள ‘அன்னபூரணி’ திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், படம் குறித்து படக்குழுவினர் பேட்டி அளித்துள்ளனர். அதில் பேசிய நயன்தாரா, “லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லாதீர்கள், அது சொன்னாலே என்னைத் திட்டுகிறார்கள்.
இன்னும் நான் அந்த இடத்துக்கு வரவில்லையா அல்லது பெண் என்ற காரணத்தினால் அது இருக்கக் கூடாது என நினைக்கிறார்களா எனத் தெரியவில்லை.
‘லேடி சூப்பர் ஸ்டார்’ என பத்து பேர் பெருமையாக சந்தோஷமாக சொல்கிறார்கள் என்றால் ஐம்பது பேர் திட்டுகிறார்கள்.
நான் செய்ய விரும்பும் கதைகள் எதுவும் அந்த டேகுக்காக கிடையாது. ரசிகர்கள் கொடுத்திருக்கும் அன்புக்காகத் தான் அதை எடுத்துக் கொண்டேன்” என்றார்.
அதில் பேசிய நடிகர் ஜெய், “அந்த 50 பேர் திட்டிக் கொண்டுதான் இருப்பார்கள். நான் சமீபத்தில் ஒரு திருமணத்துக்குச் சென்றிருந்தேன்.
அப்போது அங்கே ஒருவர், ‘அடுத்து நீங்கள் லேடி சூப்பர் ஸ்டாருடன் தானே நடிக்கிறீர்கள்?’ என கேட்டனர்.
ஆக அந்தப் பட்டம் நயன்தாராவுக்காகவே கொடுக்கப்பட்டது” என்றார்.
தனது 75-ஆவது படத்தை முன்னிட்டு நடிகை நயன்தாரா பேட்டியளித்துள்ளார்.

Related posts