சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசேட அறிவித்தல்

அச்சுப்பொறிகள் இல்லாத காரணத்தால் வழங்கப்பட முடியாமல் குவிந்து கிடக்கும் அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் எதிர்வரும் 6 மாதங்களில் விநியோகிக்க முடியும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இதுவரை 900,000 சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிட முடியாத அளவிற்கு குவிந்துள்ளதாக “அத தெரண” வினவிய போது அவர் தெரிவித்தார்.

சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்குத் தேவையான மூன்று அச்சுப்பொறிகள் கடந்த திங்கட்கிழமை தமக்கு கிடைத்ததாகவும், அதன்படி இந்த வாரத்தில் இருந்து அச்சிடும் நடவடிக்கை தொடங்கும் என்றும் அவர் கூறினார்.

“சாரதி அனுமதிப் பத்திரத்தில் ஏற்பட்ட பிரச்சனை கார்டுகள் இல்லாதது அல்ல. சமீபகாலமாக நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் கடன் கடிதத்தை திறந்து கார்டுகளை கொண்டு வர முடியாமல் போனது. அதன் பிறகு கார்டுகளை கொண்டு வந்தோம். ஆனால் கார்டுகளை அச்சடிக்கும் இயந்திரங்களில் பிரச்சினை ஏற்பட்டது. இந்த திங்கட்கிழமை தான் எமக்கு மூன்று இயந்திரங்கள் கிடைத்தன. இந்த வாரம் அச்சிடுதல் தொடங்கும். எதிர்வரும் 6 மாதங்களில் குவிந்து கிடக்கும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் அச்சிடப்படும் என நம்புகிறேன்” என்றார்.

மோசடியாளர்களால் 5000 ரூபாவுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் விநியோகத்தமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த நிஷாந்த அநுருத்த, இது தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு விசாரணை பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Related posts