மலையக மக்களின் தலைமைகள் ஒன்றுபட வேண்டியதன் அவசியம்

மலை­யக மக்கள் இலங்­கைக்கு வருகை தந்து 200 ஆண்­டுகள் பூர்த்­தியாவதை முன்­னிட்டு ‘மலை­யகம் 200’ எனும் தொனிப்­பொ­ருளில் இந்த வருடம் முழு­வதும் பல்­வேறு நிகழ்­வு­களை நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டி­ருந்­தது. இத்­த­கைய நிகழ்­வுகள் அர­சியல் கட்­சிகள், சிவில் சமூக அமைப்­புக்கள், மற்றும் அரசு சார்­பற்ற நிறு­வ­னங்களினால் ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்டி­ருந்­தன.

கடந்த 2ஆம் திகதி கொழும்பு சுக­த­தாச உள்­ள­க­ அரங்கில் அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் ஏற்­பாட்டில் ‘நாம் 200’ எனும் நிகழ்வு நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இந்­த­நி­கழ்வில் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க, பிர­தமர் தினேஷ்­கு­ண­வர்த்­தன, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ, இந்­திய நிதி அமைச்சர் நிர்­மலா சீதா­ராமன் உட்­பட இலங்­கையின் அமைச்­சர்கள், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், முக்­கி­யஸ்­தர்கள் மற்றும் இந்­திய அர­சியல் தலை­வர்கள் என பெரு­ம­ள­வானோர் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

இந்த நிகழ்வில் பங்­கேற்­றி­ருந்த ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க மலை­யக மக்­களை தேசிய நீரேட்­டத்தில் இணைப்­பதன் அவ­சியம் குறித்து வலி­யு­றுத்­தி­ய­துடன் இது­ தொ­டர்பில் நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­கென பிர­தமர் தினேஷ்­ கு­ண­வர்த்­தன தலை­மையில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் அறி­வித்­தி­ருந்தார். அத்­துடன் மலை­யக மக்­க­ளுக்கு உறு­திப்­பத்­தி­ரத்­துடன் கூடிய 10 பேர்ச் காணியை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் மலை­யக மக்கள் தமது காணி­களில் தேயி­லையை பயி­ரிட்டு அவற்றை தொழிற்­சா­லை­க­ளுக்கு விநி­யோ­கிக்­கக்­கூ­டிய வகையில் பெருந்­தோட்­டத்­து­றையில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்த வேண்­டு­மென்றும் அதற்கு பெருந்­தோட்டக் கம்­ப­னிகள் ஒத்­து­ழைக்க வேண்­டு­மெ­னவும் அழைப்பும் விடுத்­தி­ருந்தார்.

மலை­யக பெருந்­தோட்ட மக்­களை சிறு­தோட்ட உரி­மை­யா­ளர்­க­ளாக மாற்றும் வகை­யி­லான திட்­டத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டே ஜனா­தி­பதி இந்த அறி­விப்­பினை விடுத்­தி­ருந்தார்.

இதே­போன்­றுதான் இந்த மாநாட்டில் பங்­கேற்­றி­ருந்த இந்­திய நிதி அமைச்சர் நிர்­மலா சீதா­ரா­மனும் மலை­யக மக்­களின் வளர்ச்­சிக்கு இந்­தி­யாவின் உத­விகள் தொடரும் என்று உறு­தி­மொழி வழங்­கி­யி­ருந்தார். இவ்­வாறு ‘நாம் 200’ மாநாட்டில் பங்­கேற்­றி­ருந்­த­வர்கள் மலை­யக மக்­களின் எதிர்­காலம் தொடர்­பிலும் அவர்­க­ளுக்­கான உத­விகள் குறித்தும் பல்­வே­று ­க­ருத்­துக்­களை தெரி­வித்­தி­ருந்­தனர்.

மலை­யக மக்கள் குறிப்­பாக பெருந்­தோட்ட தொழி­லா­ளர்கள் இலங்­கைக்கு வருகை தந்து 200 வரு­டங்கள் ஆகி­விட்­ட­போ­திலும் அவர்­க­ளது வாழ்­வா­தாரம் இன்­னமும் கட்­டி­யெ­ழுப்­பப்­ப­ட­வில்லை. அடிப்­படை வச­தி­க­ளற்ற வகை­யி­லேயே பெருந்­தோட்ட மக்கள் இன்­னமும் வாழ்ந்து வரு­கின்­றனர். காணி உரிமை, வீட்­டு­ரிமை இன்றி அவர்கள் தொடர்ந்தும் லயன் அறை­க­ளி­லேயே வாழ்ந்­து­வரும் நிலைமை நீடித்து வரு­கின்­றது.

அதே­போன்றே உரிய வரு­மா­னங்கள் இன்றி அவர்கள் பல்­வேறு இன்­னல்­களை சந்­தித்து வரு­கின்­றனர். நாட்டின் பொரு­ளா­தா­ரத்தின் முது­கெ­லும்­பாக காணப்­படும் தேயி­லைத்­து­றையை கட்­டி­யெ­ழுப்­பிய மலை­யக மக்­க­ளுக்கு இன்­னமும் போதி­ய­ளவு சம்­பளம் பெற­மு­டி­யாத நிலைமை நீடித்து வரு­கின்­றது. தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு ஆயிரம் ரூபா சம்­பளம் வழங்­கு­வ­தற்கு கூட பெரும் இழு­பறி நிலைமை ஏற்­பட்­டி­ருந்­தது. தற்­போ­து­கூட ஆயிரம் ரூபா சம்­பளம் வழங்­கப்­ப­டு­வ­தாக கூறப்­ப­டு­கின்ற போதிலும் சகல தொழி­லா­ளர்­க­ளுக்கும் அந்த தொகை கிடைக்­கின்­றதா என்றால் அதற்கு உரிய பதில் வழங்க முடி­யாத நிலை­மையே நீடித்து வரு­கின்­றது.

இவ்­வாறு அடிப்­படை வச­தி­க­ளின்றி வாழ்ந்­து­வரும் பெருந்­தோட்டத் தொழி­லா­ளர்­களின் வாழ்­வா­தா­ரத்தை மேம்­ப­டுத்தி அவர்­க­ளுக்­கான கல்வி, சுகா­தார வச­தி­களை உரி­ய­ வ­கையில் வழங்­க­வேண்­டு­மானால் அதற்­கு­ரிய திட்­ட­மி­டல்கள், அவ­சி­ய­மா­க­வுள்­ளன. தற்­போ­தைய ஜனா­தி­பதி ரணில்­விக்­கி­ர­ம­சிங்க மலை­ய­க ­மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காண தயா­ராக உள்­ள­தா­கவும் அதற்­கான ஒத்­துழைப்புக்­களை சகல தரப்­பி­னரும் வழங்­க­வேண்டும் என்றும் வலி­யு­றுத்தி வரு­கின்றார்.

இந்த நிலையில் மலை­யக மக்­களின் வாழ்­வா­தா­ரத்தை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டு­மானால் அந்த மக்­களின் பிர­தி­நி­திகள் மத்­தியில் ஒற்­று­மையும் ஒரு­மைப்­பா­டான செயற்­பாடும் அவ­சி­ய­மா­க­வுள்­ளது. ஆனால் அவ்­வாறு ஒற்­று­மை­படும் விட­யத்தில் மலை­யக அர­சியல் கட்­சி­களின் தலை­மைகள் அக்­கறை காட்­டு­வ­தாக தெரி­ய­வில்லை,

மலை­யக மக்கள் இலங்­கைக்கு வந்து 200 வரு­டங்கள் பூர்த்­தியாவதை முன்­னிட்டு இவ்­வாண்டின் ஆரம்­பத்­தி­லி­ருந்து பல்­வேறு நிகழ்­வுகள் இடம்­பெற்­றுள்­ளன. யாழ்ப்­பாணம் உள்­ளிட்ட பல பகு­தி­க­ளிலும் இத்­த­கைய நிகழ்­வுகள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. கண்டி சமூக அபி­வி­ருத்தி நிறு­வனம், யாழ். நண்­பர்கள் அமைப்பு, நாவ­லப்­பிட்டி அகில இலங்கை ஐக்­கிய தொழி­லாளர் காங்­கிரஸ் ஆகி­யன நிகழ்­வு­களை நடத்­தி­யி­ருந்­தன. மன்னார் தொடக்கம், மாத்­தளை வரை­யான பாத­யாத்­திரை, தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தல­வாக்­கலை பாத­யாத்­திரை, நிகர் அமைப்பின் மலை­யக 200 வருட மர­ ந­டுகை வார நிகழ்வு, நிகர் அமைப்பின் மலை­யகம் 200 நினைவு முத்­திரை வெளி­யீட்டு நிகழ்வு, விம்பம் அமைப்பின் போட்டி நிகழ்­வுகள் உட்­பட பல்­வேறு நிகழ்­வுகள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன.

இந்த நிகழ்­வு­களில் அர­சியல் கட்­சி­களின் தலை­வர்கள் சக­லரும் ஒன்­றி­ணைந்து பங்­கேற்­றி­ருக்­க­வில்லை. ஒரு சில நிகழ்­வுக்கு சில கட்­சி­களின் தலை­வர்கள் மட்­டுமே கலந்து கொண்­டி­ருந்­தனர். இதே­போன்­றுதான் ‘நாம் 200’ நிகழ்வில் எதிர்க்­கட்­சி­யினர் பங்­கேற்­றி­ருக்­க­வில்லை.

இந்த நிகழ்­வா­னது அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யுடன் இடம்­பெற்­றி­ருந்­தது. ஜீவன் தொண்­ட­மானின் நீர்­வ­ழங்கல், தோட்ட உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்தி அமைச்சின் ஏற்­பாட்டில் நடை­பெற்ற இந்த நிகழ்வில் மலை­ய­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வர்கள் எவரும் பங்­கேற்­க­வில்லை. எதிர்க்­கட்­சித்­த­லைவர் சஜித் பிரே­ம­தாச உட்­பட ஐக்­கிய மக்கள் சக்­தி­யி­னரும் இந்­நி­கழ்வில் கலந்­து­கொண்­டி­ருக்­க­வில்லை.

இந்த மாநாட்டில் பங்­கேற்­ப­தற்­கான அழைப்பு தனக்கு கிடைக்­க­வில்லை என்று தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலைவர் மனோ கணேசன் தெரி­வித்­த­துடன் மாநாடு வெற்­றி­பெற வாழ்த்­து­வ­தா­கவும் அறிக்­கை­யொன்றின் மூலம் குறிப்­பிட்­டி­ருந்தார்.

இதே­போன்றே தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியில் அங்கம் வகிக்கும் தொழி­லாளர் தேசிய சங்­கத்தின் தலைவர் பி. திகாம்­பரம், மலை­யக மக்கள் முன்­ன­ணியின் தலைவர் வே. இரா­தா­கி­ருஷ்ணன் ஆகி­யோரும் இந்த நிகழ்வில் பங்­கேற்­க­வில்லை. நிகழ்வில் பங்­கேற்­ப­தற்­கான அழைப்பு கிடைக்­க­வில்லை என்று மனோ கணேசன் எம்.பி. குற்­றம்­சாட்­டி­யி­ருந்­த­போ­திலும் சக­ல­ருக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­ட­தாக இலங்கை தொழி­லாளர் காங்­கி­ரஸின் செய­லாளரும் அமைச்­ச­ரு­மான ஜீவன் தொண்­டமான் தெரி­வித்­தி­ருந்தார்.

மலை­யக மக்­களின் இலங்கை வரு­கையை குறிக்கும் வகை­யிலும் அவர்­களின் எதிர்­கால செயற்­றிட்­டங்கள் தொடர்பில் ஆராயும் வகை­யிலும் நடத்­தப்­பட்ட அர­சாங்­கத்தின் அனு­ச­ர­ணை­யு­ட­னான தேசிய நிகழ்வில் மலை­யக மக்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் சகல கட்­சி­களின் தலை­வர்­களும் பங்­கேற்­றி­ருக்­க­வேண்டும். இந்­திய அர­சியல் தலை­வர்கள் உட்­பட்ட பெருந்­தொ­கை­யானோர் பங்­கேற்ற இந்த நிகழ்வில் சகல மலை­யக பிர­தி­நி­தி­களும் ஒன்­றி­ணைந்து தமது ஒற்­று­மையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­க­வேண்டும். ஆனால் அவ்­வாறு நடை­பெ­ற­வில்லை என்பது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும்.

இந்த விட­யத்தில் யார் தவ­றி­ழைத்­தார்கள் என்­பது தொடர்பில் ஆராய்­வ­தை­விட எதிர்­கா­லத்­தி­லா­வது இத்­த­கைய நிகழ்­வு­களில் சகல மலை­யக பிர­தி­நி­தி­களும் பங்­கேற்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். இவ்­வா­றான மலை­யக மக்கள் தொடர்­பான பொது­வான விட­யங்­களில் அர­சியல் சுய­ந­லன்­களை அப்பால் வைத்­து­விட்டு அனைத்து தரப்­பி­னரும் ஒன்­று­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­க­வுள்­ளது

ஏனெனில் மலையக மக்கள் பெரும் கஷ்டங்களுக்கு மத்தியிலேயே தமது அன்றாட வாழ்க்கையினை முன்னெடுத்து வருகின்றனர். அவர்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு அவர்களது வாழ்வாதாரம் மேம்பட வேண்டுமானால் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலை வர்கள் மத்தியில் ஒற்றுமை என்பது அவசியமானதாகும் தேர்தல் காலங்களில் வேறுபட்டு நின்றாலும் மலையக மக்களின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து ஒருமைப்பாட்டுடன் செயற்படவேண்டும்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளராக ஜீவன் தொண்டமான் பதவியேற்றதையடுத்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுடன் நெருக்கமான உறவை பேணியிருந்தார். முற்போக்கு கூட்டணியின் அலுவலக திறப்பு விழாவிலும் அவர் பங்கேற்றிருந்தார். ஆனால் இந்த நிலைமை தற்போது மாறியிருக்கின்றது. இனியாவது மலையக மக்களின் நன்மை கருதி இந்த தலைவர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

Related posts