2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் சாராம்சம்!

நிதியமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ‘வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை“ என்ற தொனிப் பொருளில் பாராளுமன்றத்தில் இன்று (13) சமர்ப்பிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் சாராம்சம்!

1. 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தடம் புரண்டிருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கடந்த வருடத்தில் மீண்டும் சரியான பாதையில் தூக்கி நிறுத்த முடிந்ததாகவும், அதற்காக மக்கள் கடுமையாக உழைத்த போதும், சில தரப்பினர் நாட்டை பின்நோக்கி இழுக்க முயற்சித்ததாகவும் குறிப்பிட்டார்.

2. கற்பனைக் கதைகளால் நாட்டை முன்கொண்டு செல்ல முடியாது எனவும், நீண்ட காலமாக அரசியல் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளின் இறுதி முடிவு, நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, துரதிஷ்டவசமாக நாட்டில் உள்ள சில தரப்பினர் இதனை இன்னும் புரிந்து கொள்ளவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

3. 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அரசியல் நோக்கங்களுக்காக மாயைகளைப் பரப்புவதை நிறுத்துமாறும், அரசியலை விட நாட்டைப் பற்றி சிந்தித்து நாட்டை உயர்த்துவதற்கு அனைவரும் தம்மை உண்மையாக அர்ப்பணிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

4. இந்த கடினமான பாதையில் நாம் தொடர்ந்து பயணித்தால், சிறந்த பொருளாதாரத்தை விரைவில் உருவாக்க முடியும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த வருடத்தை திரும்பிப் பார்க்கும் போது, நாடு சரியான பாதையில் செல்வது 100% உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

5. 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதுவரையான பயணத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் பாடுபடுவதாகத் தெரிவித்தார்.

6. பணவீக்க விகிதத்தை ஒற்றை இலக்கமாக குறைக்க முடிந்ததால், பணவீக்கத்தின் தாக்கத்தில் இருந்து நாட்டை மீட்க முடிந்துள்ளதாக 2024 வரவு செலவுத் திட்ட உரையின் போது ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

7. வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை மீட்டெடுப்பது மிகவும் கடினமான செயற்பாடு என்று தெரிவித்த ஜனாதிபதி, ஆட்சியைக் கைப்பற்றும் அரசியல் நோக்கத்துடன் மக்களிடையே நிவாரணம் வழங்கும் கனவு மாளிகைகளை நிர்மாணித்தால் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்கே தள்ளப்படலாம் எனவும் தெரிவித்தார்.

8. இதுவரையான பயணத்தின் வெற்றிக்கு அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்த வேலைத்திட்டமே காரணம் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் ஊடாக 2022 ஆம் ஆண்டைப் போன்று பொருளாதார நரகத்தில் வீழ்ந்துவிடாமல் முன்நோக்கிச் செல்வதற்கு அடித்தளமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

9. மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் போன்ற நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் நட்டத்தை ஈடுசெய்ய, அரச வங்கிகளில் தொடர்ச்சியாக கடன்களைப் பெற்று வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த நிலைமையினால் அந்த வங்கிகள் பலவீனமடைந்து வீழ்ச்சியடைவதைத் தடுக்க மக்களின் வரிகளைப் பயன்படுத்த அரசுக்கு நேரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

10. பாரிய அளவிலான குறைந்த செலவில் புதுப்பிக்கத்தக்க வலு சக்தியை பிரதான கட்டமைப்புடன் இணைப்பதற்குத் தேவையான அனைத்து சட்ட ரீதியான தடைகளும் நீக்கப்பட்டுள்ளதாகவும், செயல்திறனற்ற மின்சார சபையை வினைத்திறன்மிக்க நிறுவனமாக மறுசீரமைப்பதற்கான ஒழுங்குவிதிகள் தற்போது வகுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

11. அரச துறையின் மாதாந்த சம்பளத்திற்காக 93 பில்லியன் ரூபா, காப்புறுதி, மருந்துகள், ஓய்வூதியம் உட்பட பொதுநல செலவுகளுக்கு 30 பில்லியன் ரூபா, கடன் வட்டி செலுத்த 220 பில்லியன் ரூபா என 03 பிரதான செலவுகளுக்காக மாத்திரம் அரசாங்கம் ஒவ்வொரு மாதமும் 383 பில்லியன் ரூபாவை செலவிடுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

12. 2021ஆம் ஆண்டுக்குள் 900 பில்லியன் ரூபாவாக இருந்த வங்கி மிகைப்பற்று, 70 பில்லியன் ரூபாவாகக் குறைக்கப்பட்டுள்ளதாக, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

13. அரச வருமானத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% இலிருந்து 15% ஆக அதிகரிக்காவிட்டால் நாடு மீண்டும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு சில குழுக்களின் எளிய மற்றும் அழகான வாக்குறுதிகளால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது எனவும் தெரிவித்தார்

14. நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் வரி விலக்குகள் உள்ளிட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் பல்வேறு முன்மொழிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக அரச வருமானம் அதிகரிக்கும் போது அதனை விட அதிகமான வரிச் சலுகைகளை வழங்க முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

15. 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, அரச செலவினங்களில் 35% அரச ஊழியர்களின் சம்பளத்திற்காக செலவிடப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

16. நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களின் சுமை முழுவதுமாக பொதுமக்களையே சார்ந்துள்ளது எனவும், தேசிய சொத்துக்கள் எனக் கூறித் தொடர்ந்தும் மக்கள் மீது அச்சுமையை சுமத்தும் அரசியல் குழுக்கள் நாட்டை பின்னடையச் செய்து வருவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

17. சுற்றுலாத் துறைக்காக நுவரெலியா தபால் அலுவலகம் ஒதுக்கப்பட்டமை தனிமைப்படுத்தப்பட்ட சம்பவம் அல்ல எனவும், மாறாக அது நுவரெலியா அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு அங்கமே எனவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த வரலாற்று சிறப்புமிக்க புராதனக் கட்டிடங்களை உரிய நேரத்தில் சுற்றுலாத் தொழில்துறை போன்ற அந்நியச் செலாவணி ஈட்டும் பணிகளுக்குப் பயன்படுத்தாவிட்டால் காலி தபால் அலுவலகத்துக்கும் நேர்ந்த கதியே இதற்கும் ஏற்படக்கூடும் என்றும் குறிப்பிட்டார்.

18. இந்த நாட்டில் இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்ட அரசியல் மற்றும் பொருளாதாரக் கருத்தியல்கள் தோல்வியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசியல் முறைமையையும், பொருளாதார முறைமையையும் முற்றாக மாற்றியமைத்து, புதிய கோணத்தில் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

19. கடந்த கால அனுபவங்கள், உலகளாவிய போக்குகள் மற்றும் எதிர்கால சவால்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு எமக்குரிய தனித்துவமான பொருளாதார மற்றும் அரசியல் முறைமையை நாம் உருவாக்க வேண்டும் என்று, 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

20. 2021 ஆம் ஆண்டில் இலங்கையின் முதன்மை வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.7% ஆக இருந்த போதிலும், 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையின் முதன்மை வரவு செலவுத் திட்டத்தில் மேலதிகத்தை உருவாக்க முடிந்ததாக, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையில் ஜனாதிபதி தெரிவித்தார்.

21. 2022 செப்டெம்பர் மாதத்தில் 70% ஆக உயர்ந்திருந்த பணவீக்கத்தை, கடந்த ஒக்டோபர் மாதத்திற்குள் 1.5% ஆகக் குறைக்க முடிந்ததாகவும், அன்று பூஜ்ஜியமாகக் குறைந்திருந்த அந்நியச் செலாவணிக் கையிருப்பை, 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை உயர்த்துவதற்கு முடிந்தது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

22. இம்முறை வரவு செலவுத் திட்டம், நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் மற்றும் தற்போதைய சர்வதேச போக்குகளுக்கு ஏற்ப புதிய பொருளாதார அடித்தளத்தை அமைக்கும் வரவு செலவுத் திட்டமாகும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேர்தல் வெற்றியை விட நாட்டின் வெற்றியே தனக்கு முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.

23. அரச ஊழியர்களுக்கு தற்போதுள்ள 7,800 ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2024 ஜனவரி முதல் நடைமுறைக்குவரும் வகையில் மேலும் 10,000 ரூபாவால் உயர்த்தப்படும்.

24. அரசாங்க ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான மாதாந்த வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவு 2,500 ரூபாவால் அதிகரிக்கப்படுவதோடு, அதன்படி 2024 இல் ஓய்வூதியத்திற்காக 386 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

25. தொலைதூரக் கடமையில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகளுக்கு தகுந்த மாற்றங்களுடன் உணவு மற்றும் தங்குமிடக் கொடுப்பனவை செலுத்துப்படும்.

26. கடந்த காலங்களில் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட அரச ஊழியர்களின் அனர்த்தக் கடன் வசதி, 01-01-2024 முதல் முன்னர் காணப்பட்டவாறே வழங்கப்படும்.

27. கடந்த வருடங்களில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 60 பில்லியன் ரூபாவாக இருந்த போதிலும், 2024ஆம் ஆண்டில் அது 183 பில்லியன் ரூபா வரை, மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

28. அஸ்வெசும பலன்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படும், தகுதியுள்ள பயனாளிகளுக்கு கடந்த காலத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை.

29. ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோய் உதவித்தொகை 2,500 ரூபாவினால் அதிகரிக்கப்படும்.

30. முதியோருக்கான மாதாந்த உதவித்தொகை 3000 ரூபா வரை அதிகரிக்கப்படும்.

31. புதிய குடும்பங்கள் பயனாளிகள் பட்டியலில் தாமதமின்றி இணைத்துக்கொள்ள 06 மாதங்களுக்கு ஒரு முறை, அஸ்வெசும பயனாளிகளின் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும்.

32. அஸ்வெசும வேலைத்திட்டம், ஊனமுற்றோர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளுக்காக 2024 இல் ஒதுக்கப்படும் தொகை, 205 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்படும்.

33. கடந்த காலத்தில் நெருக்கடியை எதிர்கொண்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் திட்டத்தை வலுப்படுத்த 30 பில்லியன் ரூபா சலுகைக் கடன் வசதி.

34. பாரம்பரிய சொத்துக்களை இழந்த விவசாயிகளுக்கு அந்த வயல் நிலங்களின் முழுத் தனியுரிமை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

35. நகர்ப்புறங்களில் வாழும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வீடுகளில் இருந்து வாடகை வசூலிப்பது முற்றிலும் நிறுத்தப்பட்டு, அந்த வீடுகளின் உரிமையை அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

36. தோட்டங்களில் வாழும் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக ரூபா 4 பில்லியன் ஒதுக்கீடு.

37. தோட்டங்களில் வாழும் மக்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக ரூபா 4 பில்லியன் ஒதுக்கீடு.

38. பிம் சவிய வேலைத்திட்டத்தை விரைவாக நிறைவு செய்வதற்கு தேவையான வசதிகளை வழங்க 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

39. பன்முகப்படுத்தப்பட்ட பட்ஜெட் திட்டத்தை மீள ஆரம்பிக்கும் வகையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு 11,250 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு தேசிய கொள்முதல் திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.

40. மலையகத்தைச் சேர்ந்த 89 பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய பத்து வருட பல்நோக்கு கிராமிய மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் 2024 இல் ஆரம்பிக்கப்படும். அதற்காக 2024 ஆம் ஆண்டில் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

41. அபிவிருத்தித் திட்டங்களுக்கு அனுமதி பெறுவதற்கு புதிய பொறிமுறையொன்றை அறிமுகம் செய்யவும், புதிய திட்டங்கள் தொடர்பில் மீளாய்வு செய்யவும் அரச குழுவொன்று நிறுவப்படும். அந்த கட்டமைப்புக்கு வெளியே எந்த திட்டத்திற்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட மாட்டாது.

42. 2024 வரவு செலவுத்திட்ட மூலதனச் செலவுக்கான ஒதுக்கீடு ரூ.1260 பில்லியனாக அதிகரிப்பு. இது மொத்தத் தேசிய உற்பத்தியில் 4% ஆகும்.

43. பொருளாதார நெருக்கடியால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட திட்டங்களை நிறைவு செய்ய 55 பில்லியன் ரூபாய் மேலதிக ஒதுக்கீடு.

44. அபிவிருத்தித் திட்டங்களின் ஊடாக எதிர்பார்க்கும் நோக்கங்களை உரிய காலத்தில் நிறைவு செய்ய 2024 முதல் ஒவ்வொரு அமைச்சிலும் விசேட பிரிவொன்று நிறுவப்படும்.

45. சேதமடைந்துள்ள கிராமிய வீதிகளைப் புனரமைக்க 10 பில்லியன் ரூபாவும் இயற்கை அனர்த்தங்களால் சேதமடைந்த வீதிகளையும், பாலங்களையும் புனரமைக்க 2000 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படும்.

46. நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் குடிநீர் பிரச்சனைகள் இருப்பதால், பன்முகப்படுத்தப்பட்ட நிதியைப் பயன்படுத்தும் போதும், வெளிநாட்டு கடன் உதவிகளைப் பெறும்போதும் நீர் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

47. கல்வி சீர்திருத்தங்கள் முழுமையான செயல்படுத்தப்படும். அந்த சீர்திருத்தங்கள் மூலம், தேசிய உயர்கல்வி பேரவை, தேசிய உயர்கல்வி ஆணைக்குழு மற்றும் தேசிய திறன் ஆணைக்குழு என்பன நிறுவப்படும்.

48. உயர் தரம் சித்தியடைந்த ஒவ்வொரு மாணவருக்கும் பல்கலைக்கழகக் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

49. சீதாவக்க விஞ்ஞான மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்,கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கீழ் குருநாகல் தொழில்நுட்ப நிறுவனம், முகாமைத்துவ தொழில்நுட்ப பல்கலைக்கழகம், சர்வதேச காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் ஆகிய 04 புதிய பல்கலைக்கழகங்கள் நிறுவப்படும்.

50. தனியார் உயர்கல்வி நிறுவனங்களை பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கான சட்டவிதிகள் நிறைவேற்றப்படும்.

51. கல்விக் கல்லூரிகளை இணைத்து தேசிய கல்விப் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக 2024 ஆம் ஆண்டில் 01 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

52. இந்தியாவின் சென்னையில் உள்ள IIT பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின் கீழ், கண்டி நகரில் ஒரு புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஆரம்பித்தல்.

53. அரச பல்கலைக்கழகங்களை புதிய யுகத்திற்கு ஏற்றவாறு மேம்படுத்தும் திட்டமொன்றை செயல்படுத்துவதோடு, அது பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்படும். அதற்காக 2024 ஆம் ஆண்டிற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

54. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்புத் துறை, தேசிய ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்பு நிறுவனமாக தரம் உயர்த்தப்படும். அதற்காக 2024இல் 40 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

55. உலகில் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு கல்வி நிறுவனத்திற்கும் இந்நாட்டில் பல்கலைக்கழகங்களை நிறுவ அனுமதி வழங்கப்படுவதுடன், தனியார் பல்கலைக்கழகங்களை மேற்பார்வை செய்ய வலுவான சட்டவிதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

56. அரச பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லாக் கடன் வசதிகளை, தொடர்ந்தும் வழங்குவதோடு, வணிக வங்கிகள் மூலம் சலுகைக் கல்விக் கடன் வழங்கும் முறையை அமுல்படுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

57. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழு, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழு ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு தேசிய உயர்கல்வி ஆணைக்குழுவை ஸ்தாபித்தல்.

58. தொழிற்பயிற்சி அதிகார சபை, தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை ஆகிய நிறுவனங்களை ஒருங்கிணைத்து தேசிய திறன் விருத்தி ஆணைக்குழுவை நிறுவுதல்.

59. மத்திய அரசின் கீழ் இயங்கும் தொழில் கல்வி நிறுவனங்கள் மாகாண சபைகளுக்கு மாற்றப்படுவதோடு, திறன் விருத்தி மேம்பாட்டுத் துறையை மேம்படுத்தவும் நவீனப்படுத்தவும் மாகாண கல்வி சபைகளை நிறுவுதல்.

60. தொழில்நுட்ப தொழில்துறை திறன்களை மேம்படுத்த நிதியமொன்றை ஸ்தாபிக்கத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, அதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக 2024 ஆம் ஆண்டிற்கு 450 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

61. தகவல் தொழிநுட்பம் தொடர்பான தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, வேலையில்லாத பட்டதாரிகளுக்குப் பயிற்சித் திட்டம் அமுல்படுத்தப்படும். இதற்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.

62. நிர்மாணத்துறை, பராமரிப்பு சேவை மற்றும் சுற்றுலாதுறை உள்ளிட்ட திறன் பற்றாக்குறையுள்ள முறைகளுக்குத் தேவையான பயிற்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

63. அரச துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் மூத்தவர்களுக்கு நவீன அறிவைப் பெற்றுக்கொடுக்க பாடநெறியொன்றை வழங்கத் தேவையான தொழில்நுட்ப மற்றும் பௌதீக நவீனமயமாக்கல் பணிகளுக்காக இலங்கை மன்றத்திற்கு 150 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

64. இலங்கையில் ஆங்கில எழுத்தறிவை விஸ்தரிக்க தேசிய வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு, அந்தத் திட்டத்தை ஆரம்பிக்க 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

65. சுரக்ஷா சிசு காப்புறுதித் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துதல்.

66. ஒளடத கொள்முதல் தொடர்பில் விசேட வழிகாட்டுதல்களை வழங்குதல் மற்றும் அதற்கென தனியான நிறுவனமொன்றை நிறுவுதல்.

67. மருத்துவ மற்றும் சுகாதார ஆராய்ச்சிக்கான முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தல் மற்றும் 75 மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் உட்கட்டமைப்பு ஆய்வக வசதிகளை வலுப்படுத்தும் முதற்கட்டப் பணிகளை ஆரம்பித்தல்.

68. தேசிய ஒளடத தர ஆராய்ச்சி ஆய்வு கூடத்தின் வசதிகளை மேம்படுத்த 2024 ஆம் ஆண்டில் 25 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

69. பதுளை போதனா வைத்தியசாலையில் இருதய மீளுயிர்ப்புச் சுவாச சிகிச்சை பிரிவை (Cardiopulmonary Resuscitation Unit) நிறுவத் தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்ய 300 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

70. வைத்திய நிபுணர்கள் மற்றும் தரம் நிலை மருத்துவர்கள் ஆகியோருக்கு பொருத்தமான பதவி உயர்வு முறையொன்று அறிமுகப்படுத்துதல்.

71. மருத்துவர்களின் தொழில்முறையை மேம்படுத்தும் பட்டப் பின்படிப்பு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல்.

72. சுதேச மருத்துவத் துறையை வலுப்படுத்தவும் பிரபலப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தல்.

73. சர்வதேச கேள்வியுள்ள மருத்துவ தாவரங்களுக்கு சுகாதார அமைச்சின் ஆயுர்வேத ஒளடதக் கூட்டுத்தாபனத்தின் சுதேச மருத்துவ பிரிவின் மேற்பார்வையின் கீழ் முதலீட்டாளர்களுக்கு வசதிகள் வழங்குதல்.

74. இலங்கையின் ஆரோக்கியக் கருத்திட்டத்தின் பிரகாரம், சுற்றுலா விடுதிகள் மற்றும் ஓய்வு விடுதிகளில் ஆயுர்வேத சிகிச்சை நிலையங்களை அமைக்க 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

75. விவசாய நவீனமயமாக்கல் திட்டங்கள், சிறு விவசாயிகளின் விவசாய கூட்டு முயற்சிகள் மற்றும் பயிர் பல்வகைப்படுத்தல் ஆகியவற்றிற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மீன்பிடித் தொழிலை மேம்படுத்த நவீன தொழில்நுட்ப அறிவை மீன்பிடித் தொழிலுக்குப் பயன்படுத்தவும் விசேட திட்டம் ஆரம்பிக்கப்படும்.

76. விவசாயம் மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்திகளுக்கு உதவ மாகாண விவசாய மற்றும் மீன்பிடி நவீனமயப்படுத்தல் சபைகள் நிறுவப்படும்.

77. அனைத்து கமநல சேவை நிலையங்களும் விவசாய நவீனமயமாக்கல் மத்திய நிலையங்களாக தரமுயர்த்தப்படும். 2024 பெரும்போகத்தில் இருந்து தனியார் துறையினர், விவசாயிகள் மற்றும் விவசாயத் துறை நிபுணர்கள் அடங்கிய கூட்டு திட்டத்தை செயல்படுத்த 2500 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கும்.

78. எந்தவொரு பயிர்ச் செய்கையும் மேற்கொள்ளப்படாத நிலங்களில் ஏனைய பயிர்ச்செய்கைகளை மேற்கொள்வதற்கு ஏற்கனவே உள்ள சட்டத் தடைகளை நீக்குதல்.

79. பாரியளவிலான விவசாய நடவடிக்கைகளுக்காக பொது நிறுவனங்கள் மற்றும் மகாவலி “A” மற்றும் “B” வலயங்கள், காணி சீர்திருத்த ஆணைக்குழு போன்றவற்றிற்கு சொந்தமான 03 இலட்சம் ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும்.

80. நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் 35 வீதம் பெறப்படும் வடக்குக் கடலில் மீன்பிடித்துறையை மேம்படுத்த 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

81. நன்னீர் மீன்பிடி தொழில் அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

82. சிறு குளங்ளை புனரமைக்கும் பொறுப்பை அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாய அமைப்புகளிடம் ஒப்படைத்தல்.

83. பால் உற்பத்திகளுக்கு பெறுமதி சேர்க்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ள தரப்பினரின் மீள்நிதியளிப்பு கடன் திட்டமொன்றைச் செயல்படுத்துதல்.

84. தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான அனைத்து பண்ணைகளையும் திறம்பட பயன்படுத்தி தனியார் துறையின் பங்களிப்புடன் 05 வருடங்களில் பால் உற்பத்தியை 53% அதிகரிப்பதற்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.

85. நிர்மாணத் துறையை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும். முன்னோடித் திட்டமாக வெளிவிவகார அமைச்சின் புதிய கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்படும்.

86. கொழும்பு நகரில் உள்ள தோட்டக் காணிகளில் பெரிய வீடுகள் மற்றும் வணிக வளாகங்களை நிர்மாணிக்கும் பொறுப்பு, புதிய வேலைத்திட்டமாக நிர்மாணத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

87. சிறந்த சுற்றுலாத் தலமாகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு மையமாகவும் மீண்டும் நாட்டின் நிலையை உயர்த்துவதற்கான தேசிய முயற்சிகளை நடைமுறைப்படுத்த 100 மில்லியன் ஒதுக்கீடு.

88. இலங்கையின் அமைவிடத்தை பொருளாதார ரீதியான பாரிய பெறுமதியாக மாற்றுவதற்கு சகல தரப்பினரையும் உள்ளடக்கிய தேசிய திட்டமிடல் கொள்கையை உருவாக்கி நடைமுறைப்படுத்துதல்.

89. ஆண், பெண் சமத்துவத்தின் அடிப்படையில் வரவு செலவுத் திட்ட முறையை அறிமுகப்படுத்தல், அது தொடர்பான சட்டங்களைத் தயாரித்தல் மற்றும் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டங்களை அறிமுகப்படுத்துதல்.

90. கைத்தறி நெசவுத் தொழில்துறையில் ஈடுபட்டுள்ள பெண்கள் மற்றும் இளைஞர் சமூகத்தைப் பொருளாதார ரீதியாக வலுவூட்டும் விசேட வேலைத்திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.

91. வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் வீடற்ற குடும்பங்களின் மீள்குடியேற்ற தேவைகளைப் பூர்த்தி செய்ய 2000 மில்லியன் ஒதுக்கப்படும். அத்துடன், வீடமைப்புத் திட்டத்தை துரிதப்படுத்தவும், வீடுகள் இன்றி தவிக்கும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் 500 மில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

92. வடக்கு கிழக்கில் மோதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், காணாமல் போனோரின் உறவினருக்கும் இழப்பீட்டுத் தொகையை துரிதமாக வழங்க பன்முக நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தில் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள 1500 மில்லியன் ரூபாவுக்கு மேலதிகமாக மேலும் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

93. யாழ்ப்பாணப் பிரதேசத்தின் குடிநீர்ப் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில், பாலியாறு நீர்த் திட்டத்தின் ஆரம்பப் பணிகள் 2024 ஆம் ஆண்டின் முதற்பாதியில் ஆரம்பிக்கப்படும். அதற்காக 250 மில்லியன் ரூபா வழங்கப்படும்.

94. பூநகரி நகர அபிவிருத்திக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

95. இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள காலி மாவட்ட கேட்போர் கூடத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க அரச பங்களிப்பாக 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

96. பண்டாரவளை பொருளாதார மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதற்கும் அதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்க பங்களிப்பாக 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

97. கீழ் மல்வத்து ஓயா திட்டத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட வரவு செலவு திட்ட ஒதுக்கீட்டிற்கு மேலதிகமாக மேலும் 2500 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

98. மகா விகாரை பல்கலைக்கழகத்தை ஸ்தாபிக்கும் நிர்மாணப் பணிகளின் பணிகளின் ஆரம்ப கட்டமாக 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்

99. அநுராதபுரத்தில் நவீன சர்வதேச பௌத்த நூலகத்தை நிறுவும் வேலைத்திட்டத்தில் 2024 ஆம் ஆண்டிற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

100. இலங்கையின் பௌத்த நாகரீகத்தை மையமாகக் கொண்ட ஆராய்ச்சி மற்றும் கலாசார மேம்பாட்டுகளுக்காக கண்டியில் இலங்கை பௌத்த அருங்காட்சியகம் ஒன்று நிறுவப்படும். அதன் நிர்மாணப் பணிகளுக்காக 2024 ஆம் ஆண்டிற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.

101. நாடளாவிய ரீதியில் பாடசாலை கிரிக்கட் அபிவிருத்திக்காகவும், மாகாண மட்டத்தில் வீரர்களுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதுடன், நிதி ஒதுக்கீடுகளை வழங்கும்போது வசதி குறைந்த பாடசாலைகள் மற்றும் மாகாணங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளது.

102. 2024ம் ஆண்டு மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் டிஜிட்டல் மயமாக்கப்படும்.

103. மேல் மாகாணத்தில் போக்குவரத்து சபையுடன் இணைந்து 200 மின்சாரப் பேருந்துகளை இயக்குவதற்கான முன்னோடித் திட்டம்.

104. கண்டி பல்வகை போக்குவரத்து நிலையத் திட்டம் 2024 ஜனவரியில் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், அதன் பிரவேச வீதிகளின் அபிவிருத்திக்காக 1.5 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

105. அனுராதபுரம் முதல் மிஹிந்தலை வரையிலான ரயில் பாதையின் முழுமையான புனரமைப்புப் பணிகள் 2024 ஜனவரிக்குள் நிறைவடைவதோடு, போக்குவரத்துப் பொருளாதார மற்றும் கொள்கலன் மற்றும் சேமிப்பு வசதிகளுடன் கூடிய மிஹிந்தலை ரயில் நிலைய வளாகத்தை அடிப்படையாகக் கொண்ட திட்டத்திற்கு 200 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தனியார் துறையினரும் பங்களிப்பு செய்கின்றனர்.

106. மாகாண சபைகளால் சேகரிக்கப்படும் வருமானத்தை மாகாணத்தின் அபிவிருத்திக்கான மூலதனச் செலவீனமாகப் பயன்படுத்துவது தொடர்பில் முன்மொழிவு

107. மாகாண சபைகளால் ஏற்றுமதிக் கைத்தொழிலை ஊக்குவிக்க முன்மொழியப்பட்டதோடு 1990 ஆம் ஆண்டின் 46 ஆம் இலக்க கைத்தொழில் ஊக்குவிப்புச் சட்டத்தின் கீழ் கைத்தொழில்கள் தொடர்பான மாகாண சபைகளின் அதிகார வரம்புகள் திருத்தப்பட்டுள்ளன.

108. உள்ளூராட்சி சபைகளில் சுயநிதி முகாமைத்துவம் மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது.

109. தேசிய மக்கள் பேரவை செயலகத்தை அமைப்பதற்கு 700 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.

110. ஹிங்குரக்கொட சர்வதேச விமான நிலையத்தை நிர்மாணிப்பதற்கான அடிப்படை பணிகளுக்காக 2024 ஆம் ஆண்டில் 02 பில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

111. அனைத்து அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் இளைஞர்களின் அபிவிருத்தியை மையமாகக் கொண்ட வேலைத்திட்டங்களை ஒருங்கிணைத்து ஜனாதிபதி அலுவலகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட இளைஞர் அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு பில்லியன் ரூபாவை ஒதுக்க முன்மொழியப்பட்டுள்ளது.

112. இரத்தினக்கல் கைத்தொழிலினால் இன்னும் முழு கொள்ளளவை அடைய முடியவில்லை, அதற்காக அடுத்த 03 மாதங்களில் பொதுவான வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

113. பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் கரையோர சுற்றுலா வலயம் உள்ளிட்ட திருகோணமலை நகரை அண்டிய அபிவிருத்திக்காக இந்திய முதலீட்டுடன் இணைந்து செயலாற்ற ஜனாதிபதி செயலணி நிறுவப்படும்

114. காலி மாவட்ட வெள்ளத்தடுப்பிற்காக கிங்கங்கை நீர் முகாமைத்துவ திட்டத்தை செயற்படுத்துவதற்காக ஆரம்ப பணிகளுக்காக ரூ250 மில்லியன் ஒதுக்கப்படும்.

115. வெளிநாட்டுக் கடனை மறுசீரமைப்பதற்கும், வெளிநாட்டுக் கடனின் மறுசீரமைப்பின் கீழ் சர்வதேச இறையாண்மைப் பத்திரங்களைத் தீர்ப்பதற்கும் இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் 3000 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

116. வங்கிக் கட்டமைப்பில் மூலதன மேம்பாட்டு செயல்முறைக்கு ஆதரவு வழங்க 450 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட்டுள்ளது.

117. அரச வங்கிகளின் நிதி நிலை எதிர்காலத்தில் மோசமடைவதைத் தடுக்க, தலைமை அதிகாரிகள் மற்றும் அரச வங்கிகளின் பணிப்பாளர் குழு உறுப்பினர்களை நியமிப்பது தொடர்பில் கடுமையான சட்ட விதிகளை அறிமுகப்படுத்தல்

118. அரச கடன் முகாமைத்துவச் சட்டம், அரச நிதி முகாமைத்துவச் சட்டம், அரச சொத்து முகாமைத்துவச் சட்டம், அரச நிறுவன மறுசீரமைப்புச் சட்டம் ஆகியவை, டிசம்பர் மாதத்தில் அல்லது 2024 முதல் காலாண்டில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

119. பொருளாதார மேம்பாட்டிற்கு காணிகளின் உயர் பயண்பாட்டிற்கான புதிய நிறுவன மாற்றங்களுடன் கூடிய புதிய காணிச் சட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும்.

120. அரச நிர்வாக சீர்திருத்தங்களை செயல்படுத்துதல்

121. இந்நாட்டின் புதிய வளர்ச்சி மாதிரியானது திறன்மிக்க, பசுமையான வளர்ச்சியைக்கொண்ட டிஜிட்டல் மயமாக்கப்பட்ட சமூக சந்தைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டது.

122. அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு சர்வதேச அனுபவத்தைப் பயன்படுத்தி வருமான நிர்வாகத்தின் செயல்திறனை அதிகரிப்பது உட்பட பல்வேறு நோக்கங்களை அடைவதற்காக இலங்கை வருமான அதிகார சபையை நிறுவுதல்.

123. ஏற்றுமதிக்கான சர்வதேச சந்தைகளை விரிவுபடுத்துதல், போட்டிப் பொருளாதாரத்தை உருவாக்க பிராந்திய முக்கிய பங்காளிகளுடன் விரிவான வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துதல்.

124. உலகளாவிய சந்தை உறவுகளை மேம்படுத்துவதற்கான அடிப்படை நடவடிக்கையாக, எதிர்வரும் 3 முதல் 5 ஆண்டுகளில் இறக்குமதிக்கான செஸ், துறைமுகம் மற்றும் விமான நிலைய வரி உள்ளிட்ட சுங்கவரி அல்லாத இறக்குமதி வரிகளை படிப்படியாக நீக்குதல்.

125. திறைசேரி செயலாளரின் தலைமையில் தேசிய வர்த்தக வசதியளித்தல் குழுவை மறுசீரமைத்தல் மற்றும் சுங்கச் சட்டங்களை நவீனமயமாக்கல்.

126. ஒற்றை சாளரத்தின் ஊடாக அனைத்து எல்லை முகாமைத்துவ நிறுவனங்களையும் தனியான ஒரே டிஜிட்டல் தளத்திற்கு கொண்டு வருவதற்கும், வர்த்தகம் தொடர்பான ஒழுங்குமுறை ஆவணங்களை தடையின்றி சரியான நேரத்தில் வழங்குவதற்கும் தேவையான செயற்பாடுகளுக்காக ரூ.200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

127. முதலீட்டாளர்களுக்குச் சேவைகளை வழங்கும் அனைத்து அரச நிறுவனங்களின் செயல்பாடுகளையும் தன்னியக்கமாக்குவது உட்பட முதலீட்டாளர்களுக்கு மிகவும் வசதியான சூழலை உருவாக்கும் பணிகளுக்காக 2024 ஆம் ஆண்டில் 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

128. தேசிய உற்பத்தித்திறன் ஆணைக்குழுவை நிறுவி அதற்கு 150 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்தல்.

129. அரச துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்குத் தேவையானபங்களிப்பு மற்றும் வழிகாட்டுதலை வழங்க முழு அதிகாரங்களுடன் கூடிய டிஜிட்டல் அதிகார சபை நிறுவுதல். அரச துறை நிபுணத்துவ நிறுவனம் மற்றும் சிவில் சமூக ஒருங்கிணைப்பு, தொழில்நுட்ப புத்தாக்கத்தை ஊக்குவிப்பதற்காக தொழில்நுட்ப புத்தாக்க சபையொன்றை நிறுவுதல்,செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயற்கை நுண்ணறிவுக்கான தேசிய நிலையத்தை நிறுவுதல். இந்த 03 நிறுவனங்களுக்காக 03 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.

130. இலங்கையில் ஆராய்ச்சிக்கான தேசிய ஆராய்ச்சிக் கொள்கையை உருவாக்குவதற்கு 8 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.

131. புதிய சுற்றுலாக் கலாச்சாரத்தை உருவாக்குதல் மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக புதிய வடிவத்தில் நீண்ட கால வேலைத்திட்டமாக “விசிட் ஸ்ரீலங்கா” திட்டத்தை 2024 முதல் நடைமுறைப்படுத்துதல்.

132. சுற்றுலாத் துறையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொறுப்பை மாகாண சபைகளிடம் ஒப்படைப்பதன் மூலம் மாகாண சுற்றுலா சபைகள் பலப்படுத்தப்படும். அது தொடர்பான வசதிகளை மேம்படுத்த 750 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.

133. அரசாங்க ஓய்வு விடுதிகளை நவீனமயமாக்கி சுற்றுலாவை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படும்.

134. பின்னவல – கித்துல்கல சுற்றுலா வழித்தடத்தை அபிவிருத்தி செய்வதற்கான மூன்று வருட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

135. கிக் பொருளாதாரம் மற்றும் வாணிப பரிவர்த்தனைகளை எளிதாக்குவதற்கு எளிமைப்படுத்தப்பட்ட கொள்கை மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிமுகப்படுத்துதல். இதில் கட்டண முறை, அரச பொது வருவாய், பணியாளர் நலன் ஆகிய பிரிவுகள் உள்ளடக்கப்படும்.

136. நிலைபெறுதகு அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலின் முன்னோக்குப் பார்வைக்கு காலநிலை சுபீட்ச நோக்கு அடிகோலுகிறது.

137. காலநிலை மாற்றம் தொடர்பான ஆணைக்குழுவொன்றை நிறுவுதல்

138. எதிர்கால உணவுப் பாதுகாப்பையும் நுகர்வோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவதையும் உறுதி செய்வதற்கும் உணவு உற்பத்திச் செயன்முறையில் ஈடுபடும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தயாரிப்பாளர்களுக்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளை வழங்குவதற்கும் பொருத்தமான வேலைத்திட்டத்திற்கு 250 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும்.

Related posts