நீதித்துறையின் சுயாதீனத்துவத்தைப் பாதுகாக்குமாறு

நீதிபதிகளினதும் நீதித்துறையினதும் கௌரவத்தையும், சுயாதீனத்தன்மையையும் பாதுகாக்குமாறு வலியுறுத்தி நாடளாவிய ரீதியிலுள்ள சட்டத்தரணிகள் திங்கட்கிழமை (9) கொழும்பு உயர்நீதிமன்றத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப்போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் மற்றும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாகப் பதவி விலகுவதாகக் குறிப்பிட்டு கடந்த மாத இறுதியில் நீதிச்சேவைகள் ஆணைக்குழுவுக்கு அவரது இராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்திருந்ததுடன், நாட்டிலிருந்தும் வெளியேறியமை பல்வேறு சர்ச்சைகளையும் நீதித்துறை சுதந்திரம் தொடர்பில் கேள்விகளையும் தோற்றுவித்திருந்தது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து நாளை திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு கொழும்பு, ஹல்ஃப்ஸ்டொப்பில் அமைந்துள்ள உயர்நீதிமன்றத்துக்கு முன்பாக கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

நாட்டின் நீதிமன்ற சுயாதீனத்துவத்தை உறுதிப்படுத்துமாறும், நீதிபதிகள் மற்றும் நீதிக்கட்டமைப்பின் கௌரவத்தைப் பாதுகாக்குமாறும், முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் ரி.சரவணராஜாவுக்கான நீதியை நிலைநாட்டுமாறும் வலியுறுத்தி முன்னெடுக்கப்படவுள்ள இப்போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு நாடளாவிய ரீதியிலுள்ள சட்டத்தரணிகளுக்கும் சட்டத்தரணிகள் அல்லாதோருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இப்போராட்டத்தில் அனைவரினதும் பங்கேற்பானது, நீதிக்கட்டமைப்பின் சுயாதீனத்தன்மையைப் பாதுகாப்பதில் அனைவரும் ஒன்றிணைந்து நிற்பதைக் காண்பிக்கும் என்று முல்லைத்தீவு சட்டத்தணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts