நாடக அரசியல்தான் மகளிர் இடஒதுக்கீடு

மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான நாடக அரசியல் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

சட்டப்பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழி வகுக்கும் மகளிர் சக்தி இடஒதுக்கீடு மசோதா தோடர்பாக மக்களவையில் இன்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று திருமாவளவன் பேசியது: “வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மசோதாவை நான் வரவேற்று ஆதரிக்கிறேன். நாம் காலம் காலமாக பெண்களை வஞ்சித்து வந்திருக்கிறோம். எக்காலத்திலும் மன்னிக்க முடியாத பெரும் பாவத்தை இழைத்திருக்கிறோம். கல்வி, அதிகாரம், கருத்துரிமை, சொத்துரிமை ஆகியவற்றை நாம் அவர்களுக்கு மறுத்திருக்கிறோம்.

பெண்கள் ஒடுக்கப்பட்டு, வீட்டிலேயே முடக்கப்பட்டிருக்கிறார்கள். ஆண்களுக்கு பணிவிடை செய்வதே அவர்களின் வாழ்வு என்று மாறிப்போனது. பிறந்தது முதல் இறக்கிற வரை ஆண்களை நம்பியே வாழ வேண்டிய சமூக அமைப்பை இந்த மண்ணில் நாம் உருவாக்கி இருக்கிறோம். இதுதான் இன்றைக்கு நமது குடியரசுத் தலைவரையே நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு அழைப்பதற்கு தயக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் பழங்குடி பெண் என்பதாலா அல்லது கணவனை இழந்த கைம்பெண் என்பதாலா என்ற கேள்வி எழுந்துள்ளது. பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஆள்பவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும். ஒரு பெண்ணை அதிகாரத்தில் அமர வைத்துவிட்டு அவரை செயல்படவிடாமல் இருக்கச் செய்வது பாவத்திலும் பெரும் பாவம்.

அந்த வகையில் இந்த இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த முடியாத நிலையை இந்த அரசு உருவாக்கி இருக்கிறது. பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை 1989-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அறிமுகப்படுத்தினார். 33 ஆண்டுகளுக்குப் பிறகு அது தற்போது அவையில் நிறைவேறும் நிலைக்கு வந்திருக்கிறது. மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் ஒரு சமூகத்துக்கு 33% இடஒதுக்கீடு வழங்க முன்வந்திருப்பது அதுவும் ஏதோ இரக்கப்பட்டுத் தருவதைப் போல தருவது சரியா? இந்த மசோதா நிறைவேறப் போகிறது. ஆனால், எப்போது அமலுக்கு வரப்போகிறது என்ற கேள்வி உள்ளது. 2033-ல்தான் இது நடைமுறைக்கு வரும் என்ற நிலை உள்ளது.

எப்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போகிறோம், எப்போது தொகுதி மறுவரையறை செய்யப் போகிறோம் என்பது தெரியவில்லை. இந்த மசோதாவை உடனே அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பு இல்லாமல் இதனை ஏன் அறிமுகப்படுத்த வேண்டும்? எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நாடக அரசியல் இது” என்று திருமாவளவன் பேசினார்.
முன்னதாக, மகளிர் இடஒதுக்கீடு மசோதா விரைவில் சட்டமாக்கப்பட்டு, வரக்கூடிய 2024 மக்களவைத் தேர்தலில் அமல்படுத்தப்பட வேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related posts