திருமலையில் விகாரை நிர்மாணிப்புக்கு எதிராக மனிதச் சங்கிலி

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் பொரலுகந்த ரஜமகா விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்த்து இன்று (03) மனித சங்கிலிப் போராட்டமொன்று திருகோணமலை, சாம்பல் தீவு பாலத்துக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோருடன் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது குறித்த விகாரை அமைக்கப்படவுள்ளதை எதிர்க்கும் வகையில், “பௌத்தர்கள் இல்லாத இடத்தில் பௌத்த விகாரை எதற்கு?”, “பெரியகுளம் விகாரை கட்டுமானத்தை உடனடியாக நிறுத்து”, “தொல்லியல் திணைக்களம் பௌத்தத்துக்கு மட்டுமா?”, “தொல்லியல் திணைக்களமே இனவாதத்தை தூண்டாதே” போன்ற வாசகங்களை ஏந்தியவாறும், பலவாறு கோஷங்களை எழுப்பியும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

முன்னதாக அப்பகுதிகளில் இடம்பெறும் ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் திருகோணமலை – நிலாவெளி பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில், திருகோணமலை நீதிவான் நிதிமன்றினால் இப்போராட்டத்தில் கலந்துகொள்வதற்கு 14 பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞர் அணித் தலைவர் கிருஷ்ணபிள்ளை பிரசாத், தமிழ்ப் பேரவையின் தலைவர் ஆர்.ஜெரோம், செயலாளர் ரமேஸ் நிக்லஸ், பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், குச்சசெளி முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பொன்னையா வைத்தியலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உட்பட மற்றைய தரப்பில் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 7 பேருக்கும் எதிராக இத்தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்றைய தினம் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு நிலாவெளி பொலிஸாரினால் குறித்த தடையுத்தரவு வாசித்துக் காட்டப்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் சாம்பல்தீவு பாலத்துக்கு அப்பால் சென்று தமது எதிர்ப்புப் போராட்டத்தை தொடர்ந்தார்கள்.

திருகோணமலை, இலுப்பைக்குளம் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அண்ணளவாக 540 குடும்பங்களைச் சேர்ந்த 2202 தமிழ் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

அத்துடன், இதனை சூழவுள்ள பெரியகுளம், ஆத்திமோட்டை, சாம்பல் தீவு மற்றும் சல்லி போன்ற கிராமங்களில் தமிழர்கள் மட்டுமே காலகாலமாக வாழ்ந்து வருகிறார்கள்.

சிங்கள பௌத்தர்கள் இல்லாத இப்பிரதேசத்தில் பௌத்த விகாரை நிறுவப்படுமானால், அது மூவின மக்களினதும் ஒற்றுமையை சீர்குலைத்து இன வன்முறைக்கும் வித்திடும் என அப்பகுதி மக்கள் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்துகின்றனர்.

இதேவேளை, குறித்த இடத்தில் பௌத்த விகாரை அமைக்க கிழக்கு ஆளுநரால் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த மாதம் 12ஆம் திகதி பெரியகுளம் சந்திப் பகுதியிலும் 28ஆம் திகதி மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஏ6 வீதியை மறித்தும் பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்ததோடு, அன்று கச்சேரியில் இடம்பெற்றுக்கொண்டிருந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திலும் புகுந்து சில பௌத்த பிக்குகள் குழப்ப நிலையை விளைவித்திருந்தனர் என்பதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts