அகிலேஷ் யாதவ் உடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு

உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும் , சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசினார் லக்னோ, நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் வசூல் 500 கோடி ரூபாயை நெருங்கி வருகிறது. இதனிடையே, இமயமலை சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக உத்தரபிரதேச மாநிலம் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து நேற்று உத்தரபிரதேச துணை முதல்-மந்திரியுடன் ரஜினி ‘ஜெயிலர்’ திரைப்படம் பார்த்தார். பின்னர் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை ரஜினி சந்தித்தார்.

இந்த நிலையில் இன்று உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரியும் , சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவை நடிகர் ரஜினிகாந்த் இன்று சந்தித்து பேசினார் இந்த சந்திப்பு குறித்து ரஜினிகாந்த் கூறியதாவது , அகிலேஷ் யாதவ் 9 ஆண்டுகளாக எனக்கு நண்பராக இருந்து வருகிறார்.

அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார். சந்திப்பு குறித்து அகிலேஷ் யாதவ் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் , மைசூரில் பொறியியல் படிப்பு படிக்கும் போது, ரஜினியை திரையில் பார்த்த மகிழ்ச்சி இன்னும் அப்படியே இருக்கிறது. நாங்கள் 9 ஆண்டுகளுக்கு முன்பு நேரில் சந்தித்தோம், அன்றிலிருந்து நண்பர்களாக இருக்கிறோம்.என தெரிவித்துள்ளார்.

Related posts